108 ஆம்புலன்ஸ் அவசர எண் மாற்றம் - புதிய எண்கள் அறிவிப்பு.. மக்களே நோட் பண்ணிக்குங்க!

Su.tha Arivalagan
Nov 27, 2025,05:42 PM IST

- அ.சீ. லாவண்யா


சென்னை: அரசின் அவசர மருத்துவ சேவைகளுக்கான தொடர்பு எண்களில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 


இதுவரை பிரசவ வலி, மாரடைப்பு, சாலை விபத்து உள்ளிட்ட அனைத்து அவசரங்களுக்கும் பொதுவாக 108 என்ற எண்ணிலேயே ஆம்புலன்ஸ் அழைக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது சேவைத் துறைகளை தனித்தனியாக பிரித்து புதிய எண்கள் வழங்கப்பட்டுள்ளன.




பெண்கள், குழந்தைகளுக்கு 102


சுகாதாரத்துறை தகவலின்படி, கர்ப்பிணிகள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு விரைவான மருத்துவ உதவி கிடைக்க 102 என்ற புதிய ஹெல்ப்லைன் செயல்படுத்தப்பட்டுள்ளது. இது மாதர்கள் மற்றும் குழந்தைகளுக்கான தனிப்பட்ட ஆம்புலன்ஸ் சேவையாகச் செயல்படும்.


சாலை விபத்துக்கு 1073


சாலை விபத்துகளுக்கான உடனடி ஆம்புலன்ஸ் உதவி பெற 1073 என்ற புதிய எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விபத்து தகவலை உடனடியாக பகிர முடிவதால் மீட்பு வேகம் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இலவச மருத்துவ ஆலோசனைக்கு 104


மேலும், பொதுமக்கள் இலவச மருத்துவ ஆலோசனை மற்றும் சுகாதார தகவல்களைப் பெற 104 என்ற ஹெல்ப்லைன் தொடரும் என கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் 24 மணி நேரமும் மருத்துவ ஆலோசனை கிடைக்கும்.


பொது அவசரத் தேவைக்கு 108


முழுமையான பொதுவான அவசர மருத்துவ உதவிகளுக்காக 108 எண் தொடர்ந்து செயல்படுகிறது, ஆனால் இது இனி எல்லா பிரிவுகளுக்கும் ஒன்றாக பயன்படுத்தப்படாது; புதிய எண்கள் பிரிக்கப்பட்டு செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


புதிய மாற்றங்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்ச்சியடைவதை உறுதி செய்ய சுகாதாரத்துறை பல்வேறு அறிவிப்புகள் மற்றும் பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளது. புதிய எண்கள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.


(அ.சீ. லாவண்யா, தென் தமிழ் இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)