10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு... அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!
சென்னை: 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
கடந்தாண்டு 10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. அதில், 11ம் வகுப்பு பொதுத்தேர்வை மட்டும் ரத்து செய்து தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. மேலும் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்தது பள்ளிக் கல்வித்துறை. பொதுத் தேர்வுகள் மீதான பயம் குறையும் விதமாகவும் மாணவர்கள் முன்கூட்டியே தேர்வு தேதியை அறிந்து கொண்டு தேர்வுக்கு தயாராகும் விதமாகவும், தேர்வு தேதிகள் முன்கூட்டியே அறிவிக்கப்படுவது நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நடப்பு கல்வி ஆண்டில் பொதுத் தேர்வுகள் நடைபெறும் தேதிகள் தற்போது வெளியாகியுள்ளது. சென்னையில் இன்று அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பொதுத் தேர்வு அட்டவணை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அதன்பின்னர் பொதுத் தேர்வு தேதியினை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார்.
12ம் வகுப்பு பொதுத்தேர்வை 8.07 லட்சம் மாணவ, மாணவிகளும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 8.70 லட்சம் மாணவ, மாணவிகளும் எழுதவுள்ளனர். ஒவ்வொரு தேர்வுக்கும் இடையே 3 முதல் 5 நாட்கள் விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது. கணக்குப் பதிவியல் துறையில் சாதாரண கால்குலேட்டரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
12ம் வகுப்பு
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2 முதல் 26 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் பிப்ரவரி 16 ஆம் தேதி வரை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடைபெறும் என்றும், மே 8 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
10ம் வகுப்பு
தமிழகத்தில் மார்ச் 11 ஆம் தேதி முதல் ஏப்ரல் 6 ஆம் தேதி வரை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
அதன்பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், பெற்றோர்கள் குழந்தைகளை இன்று இருந்து படி படி என்று கூறாமல், அவர்களுக்கு துணையாக இருந்து வழிகாட்டுங்கள். அவர்களுக்கு தேர்வு பயத்தை உருவாக்க வேண்டாம். தேர்தல் ஆணையத்துடன் கலந்து ஆலோசித்த பின்னர் தான் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியை அறிவித்துள்ளோம். 12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் (Accountancy) தேர்விற்கு கால்குலேட்டர் எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்படும். மாணவர்கள் உற்சாகத்துடன் தேர்வை எழுத வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.