11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
தஞ்சாவூர்: கும்பகோணம், பட்டீஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு மாணவர்களால் தாக்குதலுக்கு ஆளான +2 மாணவர் கவியரசன் உயிரிழப்பு. இந்த சம்பவத்தில் தாக்குதல் நடத்திய 15 மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.
கும்பகோணம், பட்டீஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சில மாதங்களுக்கு முன்னர் இருந்து 11ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த தகராறு ஒரு கட்டத்தில் முற்றியதில் ஒரு மாணவனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காயம் ஏற்பட்ட மாணவனின் பெற்றோர்கள் காயம் அடைந்த மாணவனுக்கு சிகிச்சை அளித்தனர். அதன்பின்னர், காயம் அடைந்த மாணவனின் பெற்றோர்கள் பட்டீஸ்வரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
மாணவர்கள் மைனர் என்பதால் போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து சமரசம் பேசி அனுப்பி வைத்தனர். இதனையடுத்து கடந்த 3ம் தேதி மீண்டும் இரண்டு மாணவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 4ம் தேதி பள்ளி முடிந்தவுடன், பள்ளி அருகில் இருந்த துர்க்கையம்மன் கோயில் பகுதியில் வைத்து, 11ம் வகுப்பு மாணவர்கள் 12ம் வகுப்பு மாணவனை கடுமையாக தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த படுகாயம் அடைந்த மாணவனின் பெற்றோர் காயம் அடைந்த மாணவனை மருத்துவமனையில் சேர்த்து தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.
இச்சம்பவம் குறித்து பட்டீஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, +2 மாணவரை தாக்கிய 11ம் வகுப்பு மாணவர்கள் 15 பேரை நேற்று கைது செய்தனர். தொடர்ந்து, கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர். இதனையடுத்து, தஞ்சாவூரில் உள்ள இளஞ்சிறார் நீதிகுழும நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களை சிறார் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.
மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் மாணவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.