நேபாளத்தில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு: 14 பேர் பலி

Meenakshi
Sep 08, 2025,04:55 PM IST

காத்மாண்டு: நேபாளத்தில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 14 பேர் பலியான நிலையில், 80க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.


நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு விதித்த தடையை எதிர்த்து  Gen Z தலைமுறையினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேபாளத்தில் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் விதிகளுக்கு கட்டுப்பட்டு சமூக வலைதளங்கள் இயக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்திருந்தது. கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி அன்று சமூக வலைதள நிறுவனங்கள் பதிவு செய்ய 7 நாட்கள் காலக்கெடு வழங்கியது நேபாள அரசு. அந்த கெடு முடிந்த நிலையில் 4ம் தேதி அன்று பதிவு செய்யாமல் உள்ள 26 சமூக வலைதளங்களை தடைசெய்தது.




ஆன்லைனில் தொடங்கிய போராட்டம் இன்று தெருக்கள் முழுவதும் பரவியது, போராட்டக்காரர்கள் பாராளுமன்றத்திற்கு அருகில் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். சமூக வலைதளங்களுக்கு தடை விதித்ததை எதிர்த்து நேபாளம் நாடாளுமன்றம் நோக்கி இளைஞர்கள் பேரணி சென்றனர். பேரணியாக சென்ற ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி, துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 14 பேர் உயிரிழந்தார். சுமார் 80க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.


வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இளைஞர்களின் போராட்டத்தை அடுத்து காத்மாண்டுவில் அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.  நேபாளத்தில் பல்வேறு நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை கைது செய்தனர்.