தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: 19 மாவட்டங்களில் அமைச்சர்கள் இல்லை
சென்னை: தமிழக அமைச்சரவை இன்று மாற்றம் மற்றும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் பிராந்திய வாரியாக சமநிலை பேணப்படவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. குறிப்பாக, தமிழகத்தின் 19 முக்கிய மாவட்டங்களுக்கு தற்போதைய அமைச்சரவையில் எவ்வித பிரதிநிதித்துவமும் வழங்கப்படவில்லை என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
அமைச்சர்கள் இல்லாத 19 மாவட்டங்கள் :
தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் கிட்டத்தட்ட பாதி மாவட்டங்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை. அமைச்சர்கள் பட்டியலில் இடம் பெறாத அந்த 19 மாவட்டங்களின் பட்டியல் இதோ:
தென் மாவட்டங்கள்: திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், தேனி.
வட மாவட்டங்கள்: திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி
மேற்கு மாவட்டங்கள்: தருமபுரி, கிருஷ்ணகிரி.
மத்திய மற்றும் டெல்டா மாவட்டங்கள்: கரூர், அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை.
மலைப் பிரதேசம்: நீலகிரி.
இந்த மாவட்டங்களைச் சேர்ந்த ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ.க்கள்) எவருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படாதது அந்தந்த பகுதி மக்களிடையேயும், தொண்டர்கள் இடமும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் சென்னை மாவட்டத்தில் வெற்றி பெற்ற 7 பேருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரிக்கு மட்டும் விதிவிலக்கு:
மறுபுறம், தமிழகத்தின் தென்முனையான கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சி கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி இங்கு வெற்றி பெற்றிருந்தாலும், தற்போதைய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு குமரி மாவட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படுமா?
பொதுவாக ஒரு மாவட்டத்திற்கு அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படும் போது, அந்த மாவட்டத்தின் உள்கட்டமைப்பு, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் விரைவாகச் செயல்படுத்தப்படும். ஆனால், தற்போது 19 மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் இல்லாததால், மாவட்டக் கண்காணிப்பு அமைச்சர்களைக் கொண்டே நிர்வாகத்தை நகர்த்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
இத்தனை மாவட்டங்கள் விடுபட்டிருப்பது வரும் காலங்களில் உள்ளாட்சி மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.