பஹல்காம் தாக்குதல் .. மத்திய அரசு, ராணுவம் குறித்து விமர்சனம்.. நாடு முழுவதும் 19 பேர் கைது
டெல்லி: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவத்தில், ராணுவத்தையும், உளவுத்துறையையும் விமர்சித்து கருத்து தெரிவித்தது தொடர்பாக நாடு முழுவதும் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அஸ்ஸாம், மேகாலயா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் கைது செய்யப்பட்டவர்களில் சட்டமன்ற உறுப்பினர், பத்திரிகையாளர், மாணவர்கள், வழக்கறிஞர் மற்றும் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் அடங்குவர். பெரும்பாலான கைதுகள் சமூக ஊடகப் பதிவுகளுக்காக மேற்கொள்ளப்பட்டன. அஸ்ஸாமில் மட்டும் 14 கைதுகள் நடந்துள்ளன.
அஸ்ஸாம் மாநிலத்தில் எதிர்க்கட்சியான அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் (AIUDF) சட்டமன்ற உறுப்பினர் அமினுல் இஸ்லாம், 2019ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதல் மற்றும் செவ்வாய்க்கிழமை நடந்த பஹல்காம் தாக்குதல் ஆகியவை "அரசின் சதி" என்று கூறியதற்காக தேசத்துரோகக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டார்.
வெள்ளிக்கிழமை வரை அஸ்ஸாமில் நடந்த மற்ற கைதுகளில் ஹைலாகண்டியைச் சேர்ந்த முகமது ஜாபிர் உசைன், சில்சாரைச் சேர்ந்த முகமது ஏ.கே. பஹவுதீன் மற்றும் முகமது ஜாவேத் மஜும்தார், மோரிகானைச் சேர்ந்த முகமது மஹாஹர் மியா மற்றும் சிவசாகரைச் சேர்ந்த முகமது சாஹில் அலி ஆகியோர் அடங்குவர். கரீம்கஞ்சைச் சேர்ந்த முகமது முஸ்தா அகமது என்கிற சாஹேல், முகநூலில் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்று பதிவிட்டதற்காக வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர்களில் உசைன் ஒரு பத்திரிகையாளர், பஹவுதீன் சில்சார் அஸ்ஸாம் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் மாணவர், மற்றும் மஜும்தார் ஒரு வழக்கறிஞர்.
சனிக்கிழமையன்று, பிஸ்வநாத்தைச் சேர்ந்த 25 வயதான முகமது ஜரிப் அலி மற்றும் சத்ரா முக்தி சங்க்ராம் பரிஷத்தின் மாவட்டச் செயலாளர் அனில் பானியா ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். ஹைலாகண்டியில் சுமன் மஜும்தார் என்கிற புல்புல் ஆலம் மஜும்தார், நாகானில் மஷூத் அசார் மற்றும் குவஹாத்திக்கு அருகிலுள்ள ஹாஜோவிலிருந்து மற்றொரு நபர் ஆகியோர் ஆன்லைனில் "இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களை" வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டனர்.
காச்சார் மாவட்ட காவல்துறையினர் மேலும் இரண்டு நபர்களை சமூக ஊடகங்களில் "பாகிஸ்தானுக்கு ஆதரவான உள்ளடக்கத்தை" பதிவிட்டதற்காக கைது செய்தனர்.
அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இதுகுறித்துக் கூறுகையில், தேவைப்பட்டால், அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் விதிகளை விதிப்போம். அனைத்து சமூக ஊடகப் பதிவுகளையும் நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம், மேலும் தேச விரோதிகள் என்று நாங்கள் கருதும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்... இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை. இரு நாடுகளும் எதிரி நாடுகள், நாம் அவ்வாறே இருக்க வேண்டும் என்றார் அவர்.
திரிபுரா
திரிபுராவில் இதுவரை நான்கு கைதுகள் நடந்துள்ளன. இதில் இரண்டு ஓய்வுபெற்ற ஆசிரியர்களும் அடங்குவர். தாலாய் மாவட்டத்தில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக "தேச விரோத கருத்துக்களை ஆன்லைனில்" வெளியிட்டதற்காக ஜவ்ஹர் தேப்நாத் என்ற ஓய்வுபெற்ற ஆசிரியர் மற்றும் குல்தீப் மண்டல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மற்றொரு ஓய்வுபெற்ற ஆசிரியரான சஜல் சக்ரவர்த்தி வடக்கு திரிபுரா மாவட்டத்தின் தர்மநகரிலிருந்து கைது செய்யப்பட்டார், மேலும் செபாஹிஜாலா மாவட்டத்தின் சோனமுராவிலிருந்து ஜாஹிருல் இஸ்லாம் காவலில் எடுக்கப்பட்டார்.
மேகாலயா
மேகாலயாவில், கிழக்கு காசி மலைகள் மாவட்டத்தில் இருந்து சைமன் ஷில்லா என்ற 30 வயது நபர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். அவர் குவஹாத்தியிலிருந்து ஒளிபரப்பப்பட்ட ஒரு செய்தி சேனலின் காணொளியில் "தேச விரோத கருத்தை" பதிவிட்டிருந்தார்.