சிக்கிம் ராணுவ முகாமில் ஏற்பட்ட நிலச்சரிவில்.. 3 ராணுவ வீரர்கள் பலி .. 9பேர் காணவில்லை..!

Manjula Devi
Jun 02, 2025,06:29 PM IST
சாட்டென்:சிக்கிம் ராணுவ முகாமில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
9  ராணுவ வீரர்களை காணவில்லை. அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 


கடந்த சில நாட்களாகவே வடகிழக்கு மாநிலங்களான அசாம், மணிப்பூர், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம்  உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கன மழை புரட்டி போட்டுள்ளது. இதுவரை இந்த கனமழையில் சிக்கி 40 பேர் உயிரிழந்துள்ளனர். 


வடகிழக்கு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அடுத்து 48 மணி நேரத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


குறிப்பாக மணிப்பூரில்  பெய்த இடைவிடாத மழையால் டீஸ்டா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.டீஸ்டா ஆற்றில் ஏற்பட்ட  காட்டாற்று வெள்ளத்தால் பல சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.





அதேபோல் அப்பகுதிகளில் உள்ள கிராமங்கள் மழை நீரில் சிக்கியது. ஏராளமான வீடுகளில் மழைநீர்  சூழ்ந்து கொண்டு சேதத்தை சந்தித்துள்ளன. இதனால் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி, அப்பகுதிகளில் உள்ள 5,000 மேற்பட்ட மக்கள் பாதுகாப்பாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


அதேபோல் வடக்கு சிக்கிமில் பகுதிகளிலும் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக  சாட்டென் மற்றும் லாச்சங் பகுதியில்  பெய்த கனமழையால் அப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.


அங்குள்ள இராணுவ முகாம்களிலும் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஒன்பது பேரை காணவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது.
இதனால் அப்பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது.


இந்த நிலையில் ராணுவ  முகாம்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களின் உடல்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் காயம் அடைந்த 4 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.


தொடர்ந்து அடுத்த 48 மணி நேரத்திற்கு அசாம், மணிப்பூர், சிக்கிம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கன மழை தொடரும் என்பதால் முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளை எடுக்க அந்தந்த மாநிலங்கள், மாவட்ட நிர்வாகிகளுக்கு  உத்தரவு பிறப்பித்துள்ளது.