பஹல்காம் தாக்குதல்.. பிரதமர் மோடி தலைமையில் நாளை மீண்டும் அமைச்சரவை கூட்டம்!

Manjula Devi
Apr 29, 2025,02:22 PM IST

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவரங்களுக்கான அமைச்சரவை கூட்டம் நாளை கூடுகிறது.


கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தினர். இதில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் குவிந்தன. 


இதனைத் தொடர்ந்து இந்த தீவிரவாத தாக்குதலை கண்டித்து இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியா சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, அட்டாரி வாகா எல்லைப் பகுதிகள் மூடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிரான அதிரடி நடவடிக்கை தேடுதல் வேட்டையையும் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.




தாக்குதல் தொடர்பாக முக்கிய நபர்களிடம் என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு காரணம் பாகிஸ்தானின் லஷ்கர்இதொய்பா என்ற இயக்கமே காரணம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பாகிஸ்தானின் உளவுத்துறையின் தூண்டுதலின் பேரில் இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.


இந்த தாக்குதல் காரணமாக இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் எந்த நேரத்திலும் போர் மூளலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருவதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.


இதற்கிடையே எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும். இந்த நெருக்கடியான நேரத்தில் தீவிரவாதத்திற்கு எதிராக ஒற்றுமையாக செயல்படுகிறோம் என்பதை நாம் காட்ட வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.


இந்த நிலையில் நாளை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம் மீண்டும் கூடுகிறது. இதில் முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு, எல்லை மூடல், சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு என முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.