மாற்றத்தை நோக்கி ஒரு சிந்தனை!
- வீ தமிழ்ச்செல்வி
படைப்புகள் யாவும் மிக எளிதில் உருவாக்கப்படுபவை அல்ல; சிந்தனையின் நீட்சியே ஒரு படைப்பாக உருக்கொள்கிறது. ஒரு சிறந்த படைப்பு உருவாக நேரத்தையோ அல்லது உழைப்பையோ முதலீடாகக் கொள்ள வேண்டும். மதம் கொண்ட யானை தன்னைச் சுற்றியுள்ளவற்றை அழிக்க மட்டுமே முயல்கிறது. ஆனால், தெளிவான மனமும் சிறந்த சிந்தனையும் ஒரு பேராற்றலாக வெளிப்படுகின்றன.
இன்றைய மாணவர்கள் சிந்திக்க மறந்துவிட்டார்கள்; புதிய படைப்புகளை உருவாக்கத் தவறிவிட்டார்கள். எதற்காகப் போட்டியிட வேண்டும், எதற்காகப் போராட வேண்டும், இந்தச் சமூகத்தை எவ்வாறு கட்டமைக்க வேண்டும் என்றெல்லாம் யோசிக்க அவர்களுக்கு நேரமில்லை. தங்கள் கைகளில் இருக்கும் கைப்பேசிகளும், சமூக வலைதளங்களும் நேரத்தைத் திருடுவதை அவர்கள் உணரவில்லை. எங்கே எழுவது, எங்கே மீள்வது என்று தெரியாமல் பல்வேறு உணர்ச்சிகளில் சிக்கித் தவிக்கிறார்கள்.
இந்தச் சமூகக் கட்டமைப்பில் வாழும் ஒவ்வொரு நபரும் வெற்றி எனும் களத்தைக் காண வந்தவர்கள்; அதற்கான திறவுகோலைத் தேடிப் பயணிப்பவர்கள். அவர்களை வழிநடத்தும் பொறுப்பை நாம் எவ்வாறு செய்யப் போகிறோம்? ஒழுக்கத்தையும் பண்பையும் எவ்வாறு போதிக்கப் போகிறோம்?
தடம் மாறிச் செல்லும் நீர் போலவும், கூட்ட நெரிசலில் கலைந்து செல்லும் காற்றைப் போலவும், போகிற போக்கிலெல்லாம் வாழ்வது வாழ்க்கையல்ல என்பதை இன்றைய தலைமுறைக்கு நாம் உணர்த்த வேண்டும்.
(THAMIZHSELVI V, B.T ASSISTANT , GHS,ANGUCHETTIPALAYAM , PANRUTI, CUDDALORE DT)