கள்ளிக்காட்டு இதிகாசம்... கனவு நனவாகிறது: கவிஞர் வைரமுத்துவின் நெகிழ்ச்சிப் பதிவு!
சென்னை: இதைத்தான் கனவுகண்டான், காத்திருந்தான் வைரமுத்து என்று கள்ளிக்காட்டு இதிகாசத்தின் ஆங்கில மொழிப்பெயர்ப்பு வெளியாவது குறித்து கவிஞர் வைரமுத்து நெகிழ்ந்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில்,
இதைத்தான்
கனவுகண்டான்;
காத்திருந்தான்
வைரமுத்து
உலகப் புகழும்
உலகத் தரமும் மிக்க
Oxford University Press
கள்ளிக்காட்டு இதிகாசத்தின்
ஆங்கில மொழிபெயர்ப்பை
நாளை உலகுக்கு வழங்குகிறது
‘The Saga of Kallikkadu’
என்ற தலைப்பில்
துல்லிய ஆங்கிலத்தில்
நாகலட்சுமி சண்முகம்
மொழிபெயர்த்திருக்கிறார்
103 நாடுகள் பங்குபெறும்
சென்னை பன்னாட்டுப்
புத்தகத் திருவிழாவில்
முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் வெளியிடும்
நூல்களுள் ஒன்றாக
‘The Saga of Kallikkadu’
அறிமுகமாகிறது
தமிழ்நாட்டு
ஆதிக்குடிகளின் குரல்;
வைகை நதியில்
கண்ணீரோடை கலந்த கதை;
வேட்டைக் கலாசாரத்திலிருந்து
விவசாயக் கலாசாரத்திற்கு
இடம்பெயர்ந்த மக்களின்
நிலம்கிழித்த நெடுவாழ்வு
வைகை அணையால்
புலம்பெயர்தலுக்கு ஆளான
ஓர் இனக்குழுவின்
நதியால் கழுவமுடியாத துயரம்
இதோ
உலக இலக்கியமாக
உலா வருகிறது
ஓர் உயர்ந்த பதிப்பகம்
வெளியிடுவதற்கு
நெருப்பாறுகளை
நீந்தவேண்டியிருந்தது
இது
கண்டங்களெங்கும்
விநியோகம் செய்யும்
உலகப் பதிப்பகம்
இனி நமது தமிழ்
நோபல் பரிசின்
இரும்புக் கோட்டைக்குள்
நுழைந்தாலும் நுழைந்துவிடும்
Oxford University Press,
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை,
பொது நூலகத் துறை,
தமிழ்நாட்டுப் பாடநூற் கழகம்
ஆகிய நிறுவனங்களுக்கு நன்றி
வாழ்த்துங்கள் தோழர்களே!
கனவு நனவாகிறது
வலியோடு என்று தெரிவித்துள்ளார். வைரமுத்துவின் இந்தப் பதிவு அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சமூக வலைதளங்களில் பலரும் அவருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.