"Crush" என்னும் ஆங்கில வார்த்தையின் அர்த்தம் புரியாத பருவத்தில் நாங்கள் ரசித்த சரோஜாதேவி!
சென்னை: பழம்பெரும் நடிகை சரோஜா தேவியின் மறைவையொட்டி அவரது ரசிகர் ஒருவர் எழுதியுள்ள நெகிழ்ச்சியான கட்டுரை இது. ஒரு காதலி இப்படி இருக்க வேண்டும், ஒரு மனைவி இப்படி இருக்க வேண்டும் என்ற உருவகத்தை எனக்குள் உருவாக்கியது அபிநய சரஸ்வதிதான் என்று அவர் உணர்ச்சிகரமாக தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியைச் சேர்ந்த சாய் ஆறுமுகம், மறைந்த கன்னடத்துப் பைங்கிளி, அபிநய சரஸ்வதி நடிகை சரோஜா தேவி குறித்த தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அவரது கட்டுரை:
"Crush" என்னும் ஆங்கில வார்த்தையின் அர்த்தம் புரியாத பருவம்.
அந்த வெள்ளித் திரையில் தான் இந்தக் கன்னடத்துப் பைங்கிளியை, காந்தக் கண்ணழகியை முதன் முதலில் பார்த்தேன். அன்று ஆரம்பித்தது அந்த "Crush".
அது கறுப்பு வெள்ளைக் காலம். எம்.ஜி.ஆரும், சிவாஜியும் தமிழ்த் திரையுலகில் கொடி கட்டி பறந்த காலம். 1950 முதல் 1960 கள் வரை மந்திரி குமாரி, மர்ம யோகி, வஞ்சிக் கோட்டை வாலிபன், நாடோடி மன்னன் போன்ற முடியாட்சியின் எச்சங்கள் வெள்ளித் திரையை வியாபித்திருந்தன.
அதிலிருந்து விலகி 1960 களில்தான் ( நான் பிறந்த தசாப்தத்தில்) சமுதாயச் சிந்தனைகளோடு, குடும்ப அமைப்பின் பெருமையையும், தனி மனித உறவுகளின் மேன்மையையும், காதலின் புனிதத்தையும் அடித்த தளமாகக் கொண்டு படங்கள் வெளி வரத் தொடங்கின. பாசமலர், காதலிக்க நேரமில்லை, உயர்ந்த மனிதன், தெய்வ மகன், எங்கள் தங்கம், என் அண்ணன், எங்க மாமா....
அப்போது புதிதாக திரைக்கு வரும் படங்கள் எதையுமே நான் தவற விட்டதில்லை.
எம்ஜிஆரோடு (26 படங்கள்) " தாயைக் காத்த தனயன்", தாய் சொல்லைத் தட்டாதே", " படகோட்டி", "தெய்வத்தாய்" பின்னாட்களில் " "எங்க வீட்டுப் பிள்ளை", " "அன்பே வா"....
சிவாஜியோடு (22 படங்கள்) " பாலும் பழமும்", "ஆலய மணி", "புதிய பறவை", " இருவர் உள்ளம்", "பார்த்தால் பசி தீரும்".....
அனைத்தையும் பார்த்திருக்கிறேன். இந்தப் படங்கள் எல்லாம் சினிமாவை தமிழ்ச் சமூகத்தின் பிரிக்க முடியாத அங்கமாக மாற்றத் தொடங்கிய காலம் அது.
இந்தப் படங்களின் நாயகி அந்த வயதில் எனக்குள் ஏற்படுத்திய தாக்கம் மிக அதிகம். ஒரு காதலி இப்படி இருக்க வேண்டும், ஒரு மனைவி இப்படி இருக்க வேண்டும் என்ற உருவகத்தை எனக்குள் உருவாக்கியது அபிநய சரஸ்வதிதான்.
ஆனால் பிற்காலத்தில் அதிலிருந்த சில பிற்போக்குக் கற்பிதங்களை கடந்து வர சற்று சிரமம் ஏற்பட்டது உண்மைதான். அது அந்த வயதில் ஏற்பட்ட ஒரு இனம் புரியாத ஈர்ப்பு. அவ்வளவுதான். இப்போது கூட தொலைக் காட்சியில் அவர் நடித்த காட்சியோ, பாடலோ வந்தால் கால்கள் நகராது. கண்கள் விலகாது. நாம் தேடாமல், நம் அனுமதி கேட்காமல் பட்டுப் பூச்சியின் மென்மையொத்த சில பிம்பங்கள் நம் உள் மனப் பேழையில் பொக்கிஷமாய் பாதுகாக்கப்படும். அப்படி ஒரு பிம்பம் "சரோஜா தேவி".
My First Crush. Very very strong and deep rooted. "May her soul rest in peace" என்று தெரிவித்துள்ளார் சாய் ஆறுமுகம்.