அடுப்புக்குள்ள... மிதுக்கம்பழம் (ஜாலியா ஒரு பாட்டு)

Su.tha Arivalagan
Feb 24, 2026,12:16 PM IST

- கவிஞர் க.முருகேஸ்வரி


குழந்தைப்பருவம் என்றாலே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்.... அதுவும் எங்களைப் போல 80 ஸ் கிட்ஸ்களுக்கு சொல்லவே தேவையில்லை.


எந்நேரமும் தெருவில் நண்பர்களுடன் ஆடிப்பாடி ஓடி புதிது புதிதாய் ஏதேனும் ஒரு விளையாட்டு சலிக்காமல் விளையாடிக் கொண்டிருப்போம்.


அதிலும் பெரும்பாலான விளையாட்டு பாடல் பாடிக் கொண்டே விளையாடும்‌ விளையாட்டுகளாகத்  தான் இருக்கும்....


அப்படி நான் விளையாடிய பொழுது பாடிய ஒரு சில பாடல்கள்..... என் நினைவில் நின்ற‌ சில‌ வரிகள்.....


ஒருப்பத்தி திருப்பத்தி ஓரியமங்கலம் செப்புக்குத்தி வர்ற நேரம் பூவாம் பூவாம் பட்டிணம் புத்திராசன்‌ பட்டினம்

நண்டு சுத்தி‌ கடையில குண்டு முத்து காக்காச்சி கொரத்தியம்மா கையெடு....




ஐய் சக்கா ஐய்

அரப்படி நெய்

வெள்ளக்காரன் தலையில

வெளக்கு பொருத்தி வை


திரி திரி பொம்மக்கா தில்லாட்டாம் பொம்மக்கா கள்ளன் வாரான் காதன் வாரான் ஒளிஞ்சிக்கோ .....


பொந்துக்குள்ள பாம்பு இருக்கு பொது பொதுன்னு ஓடிவா ஊகூ... ஊகூ....(ஈசல் பிடிக்கும் போது)


அடுப்புக்குள்ள மிதுக்கம் பழம் யார் எடுத்தா எவர் எடுத்தா உருண்டை தெரண்டை உருண்டை தெரண்டை ஒரு 

முழத்துக்கு நீட்டி ஒரு முழத்துக்கு நீட்டி


மொட்டையும் மொட்டையும் சேர்ந்துச்சாம்

முருங்கை மரத்தில ஏறுச்சாம்

கட்ட எறும்பு கடிச்சுச்சாம் காலு காலுன்னு கத்துச்சாம்.


மழை வருது மழை வருது நெல்லள்ளுங்க

முக்காப்படி அரிசி போட்டு முறுக்கு சுடுங்க

அங்க வர்ற மாமனுக்கு அள்ளி வையுங்க

சும்மா வர்ற‌ மாமனுக்கு சூடு வையுங்க


ஒரு‌ குடம்‌ தண்ணீர் ஊற்றி ஒரு பூ பூத்துச்சு...

ரெண்டு குடம்.....

மூனு குடம்.....


மல்லிகைப்பூவே மெல்ல வந்து மெல்ல‌  போ....

ரோஜாப்பூவே....

தாமரைப்பூவே....


(நாம் வைக்கும் பூப்பெயருக்கேற்ப பாட வேண்டும்)


காலாட்டுமணி‌ கையாட்டு மணி

கண்ணாமூச்சி ரே ரே...


இது‌ போன்று‌ விளையாட்டோடு சேர்ந்து

நீங்களும் பாடல் பாடியிருப்பீர்கள்....

பாடல் வரிகள் மட்டும் ஊருக்கு ஊர் மாறியிருக்கலாம்....

நீங்கள் விளையாடும் பொழுது பாடிய பாடல்களை நினைவு கூர்ந்து உங்கள் குழந்தைகளுக்கும்‌ சொல்லிக் கொடுங்கள்.


நம் முன்னோர்கள் கற்றுக் கொடுத்த இந்தப் பாடல்களை இந்தத் தலைமுறைக்கும் சொல்லி தான் பார்ப்போமே!


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).