அரபிக்கடலில் உருவானது.. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு..?
சென்னை: மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளில் நிலவிவரும் கீழடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழகம் மற்றும் தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேபோல் அரபிக் கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக ஆந்திரா, கர்நாடகா, டெல்லி, பெங்களூர், உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக மிக கனமழை வரை கொட்டி தீர்த்து வருகிறது.
இந்த நிலையில் அரபிக் கடலில் நிலவி வந்த ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி, தெற்கு கொங்கன்- கோவா கடலோரப் பகுதிக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது அடுத்த 36 மணி நேரத்தில் அதாவது நாளை மாலை வடக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் எனவும் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் ஏழு நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழைக்கும், ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,கேரளா, ஆந்திராவுக்கு இன்று முதல் 7 நாட்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.