தோல்வி ஒரு வேதம்!
- கவிதா உடையப்பன், சேலம்
முடியாது என்று மடிந்து விடுவதே தோல்வி
முடியும் வரை முயற்சி செய்வதே வேள்வி
தோல்வி எழுப்பும் பற்பல கேள்வி
தோன்றாத சிந்தனையும் தோன்றுமே மறுவி
விளைவும் விருதும் அசைக்குமே மன உறுதியை
லட்சியமும் லாவகமும் நிலை நிறுத்துமே கார்ய சித்தியை
ஒவ்வொரு பொழுதிலும் உள்ளது அழகிய புதுமை
ஒவ்வொரு நிகழ்விலும் கனியும் பல இனிமை
சோதனையில் பிறக்குமோர் சாதனை
வேதனையிலும் கிடைக்குமோர் போதனை
கற்பனையில் தோன்றுமோர் யோசனை
பனை ஓலையிலும் உள்ளதோர் வாசனை
வலிகள் தருமே பெரும் வலிமை
விடாமுயற்சியே நம் அடிப்படை உடமை
துவண்டு போவதோ வீண் மடமை
தொடர்ந்து செயல்படுவதே சேர்க்கும் பெருமை
தோல்வியினால் வரும் துக்கம்
அதனை உருக்கிடுமே உயர் நோக்கம்
வெற்றி தோல்வியே வாழ்வின் சுவாரஸ்யம்
அதனை பகிர்வதினால் ஆகுமோர் நற்காவியம்
உளிகள் இல்லாமல் சிற்பமும் ஏது
உலகில் இருக்கும் வரை ஊக்கமுடன் வாழு
உற்சாகம் இல்லாமல் பிறப்பும் ஏது
உள்ளுறுதியை இழக்காமல் உயர நீ ஏறு
(சேலத்தைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர் கவிதா உடையப்பன் ரத்தினா செந்தில்குமார் தலைமையிலான திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றவர். தன்னம்பிக்கை பேச்சாளரும் கூட)