அறத்தின் வழி நடந்து .. அன்பின் அருமை உரைத்தவர் .. உலக உத்தமர் காந்தியடிகள்!
அறத்தின் வழி நடந்து
அன்பின் அருமை உரைத்தவர்
அகிலம் யாவும் போற்ற
அமைதியின் பெருமை காத்தவர்
அகிம்சை நொறி நாடி
அரியன பலவும் புரிந்தவர்
அறியா வயதினிலே
அரிச்சந்திரன் கதை கேட்டு
வாய்மையைப் போற்றினார்
அயலகம் சென்று
சட்டம் பயின்றாலும்
தாயகம் தனை
உயிரென நேசித்தார்
அந்நிய மண்ணிலும்
அநீதி நீக்கிட
ஆற்றலுடன் குரல் கொடுத்தார்
அன்னை நாட்டின்
அடிமைத்தளை நீக்க
அந்நியரைப் புறக்கணிக்கும்
ஒத்துழையாமை இயக்கம்
உரிமைக்குரல் ஓங்க
உப்பு சத்தியாகிரகம்
வல்லமை உணர்ந்திட
வெள்ளையனே வெளியேறு
ஆன்ம பலம் பெருகிட
உண்ணா நோன்பு
கண்ணியம் காத்திடும்
கதராடை இயக்கம்
அண்ணல் இயற்றிய ஆர்ப்பாட்டங்கள்
நடு நடுங்கச் செய்தது ஆங்கிலேயரை
கத்தியின்றி இரத்தமின்றி
சத்தியத்தின் பாதையில்
ஆயுதங்கள் வாய் மூடிப்போக
உரக்கக் கேட்டதோ
அகிம்சையின் முழக்கம்
மண்ணில் புதைந்த வித்தாய் மகாத்மா
விண்ணை தொடும் விருட்சமாய்
விடுதலை வீரர்கள்
கிட்டியது வெற்றிக்கனியாய்
பாரதத்தாயின் சுதந்திரம்
எண்ணிய முடித்திடும்
திண்ணிய நெஞ்சராய்
ஏற்றம் கண்டவர்
உலக உத்தமர் காந்தியடிகள்
(கவிதையை எழுதிய பாரதி இளங்கவி கீர்த்தனா பு, எம்.ஏ.,நெட் படித்தவர். தூய தமிழ்ப் பற்றாளர். திருப்பூர் மாவட்டத்துக்காரர். திருவண்ணாமலை இரத்தினா செல்வக்குமார் தலைமையிலான தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு தமிழ் சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்றவர்)