தமிழன்னையே!

Su.tha Arivalagan
Sep 27, 2025,04:00 PM IST

- கவிஞர் பொ. கிருபாவதி, சென்னை


தமிழாக நான் மாற வேண்டும்! 

தமிழே உன் அருளாலே 

நான் வாழ வேண்டும்!  

தினமிங்கு உனைப்பாட வேண்டும்! 

தேன் தமிழ் பாடியே உயிர் வாழ வேணடும்!




கற்பனை வானத்தில் பறந்து.. 

கவிதைகள் பொழுதெல்லாம் புனைந்து.. 

உன் பொற்பாதம் அருகிலே இருந்து.. 

யான் பாகுபோல் உருகியே பாடிவர வேண்டும்!


முன்னோடி கவிஞர்கள் கைப் பிடித்தழைக்க.. 

அந்த முண்டாசு பாரதியின் மடியில் நான் கிடக்க.. 

பாவேந்தர் என்னோடு வாவென்று  அழைக்க.. 

கவியரசர் கவிதையில்  கரைந்துயான் மிதக்க.!


ஒவ்வொரு சொல்லாகத் தந்து.. 

நீ.. ஊட்டிவிட ஊட்டிவிட பாடல் யான் இசைக்க.. 

எவ்வாறு பார்த்தாலும் அம்மா.. 

தமிழோடும் தமிழின் சுவையோடும் நான் வாழ வேண்டும்

தமிழ் அன்னையே அருள் புரிவாய்!