இன்று ஒரு கவிதை.. இனிமைத் தமிழ் மொழி எமது!

Su.tha Arivalagan
Aug 02, 2025,04:46 PM IST

- தமிழ்மாமணி கவிஞர் இரா. கலைச்செல்வி


இனிய  மொழியாம் எமது  தமிழ் மொழி ..!!

இந்திய அரசு அறிவித்த முதல்  செம்மொழி..!!


திராவிட மொழிகளில் முதன்மை மொழி ..!!

தேசிய மொழிகளில் தமிழ் முக்கிய மொழி..!!


அகத்தியன் தொட்டிலிட்டு ,தொல்காப்பியன் தாலாட்டி ,

கம்பன் சீராட்டி ,வள்ளுவர் பாராட்டி, வளர்ந்த  மொழி..!!


என்றும் இளமை குன்றா  கன்னிமொழி..!!

எமது  தொன்மை வாய்ந்த தேன்மொழி..!!


எம் தமிழ் மொழி ஒரு அதிசய மொழி ..!! 

எத்தனை  ஆழகு சொற்கள் எம் தமிழ் மொழியில்..!!




எத்தனை இலக்கியச்சொற்கள்  எம் செம்மொழியில்..!!

என்ன சொல் இல்லை என் தாய்மொழியில்..!!


முச்சங்கங்கள் அமைத்து வளர்க்கப்பட்ட  உயர்மொழி..!!

முத்தமிழ் இணைந்த முழுமொழி எம்மொழி..!!


உள்ளத்து உணர்வை உணர வைக்கும் உயர்மொழி..!! 

உலகின்  மிகப் பழமையான தொன்மை மொழி..!!


தமிழ் மொழி போல் இனிதானது  எங்கும் இல்லை..!!

தமிழ் என்ற சொல்லுக்கே இனிமை, எனப் பொருள்..!!


என்றும் மாறாத இலக்கணக்  கோட்பாடுகள் ..!!

எழுதுவதைப் போன்றே உச்சரிக்கும் ஒரே மொழி..!!


எம் தாய்மொழி பாடல்களை கேட்கும் பொழுதில் ,

எம் செவிகளில் தேன்  வந்து பாய்கிறது..!!


தாய் தமிழ் மொழியோடு பயணிக்கும் போது ,

தாயின் மடியில் தலை சாய்த்த ஒரு உணர்வு ..!!


ஒவ்வொரு பொருளுக்கும் எத்துணை சொற்கள் தமிழில்..!

ஓராயிரம் மொழிகளில் தமிழுக்கு இணை உண்டோ..!!


நெஞ்சத்தை நெகிழச் செய்யும் அருள் மொழி..!!

நெஞ்சமெல்லாம் நிறைந்த நிகரற்ற மொழி..!!


இலக்கிய வளமும் இலக்கண நுட்பமும் பொதிந்த மொழி ..!!

இனிமை தமிழ் மொழி எம் தாய்மொழி ..!!


காலங்கள் கடந்தும் கவின்குன்றா  தமிழ் மொழி..!!

கன்னித்தமிழே ,செந்தமிழே,  தமிழுக்கு   நிகர் தமிழே..!!


புதுப்புது அறிவியல் பெருகிடும் காலத்திலும்..,

தொழில்நுட்ப  கருத்துக்கள் நுழைந்திடும் போதிலும் ,


தமிழின் சொல்லாற்றல் என்றும் அளப்பரியது..!!

தமிழின்  இலக்கண  செம்மை  நிகரற்றது..!!


ஆட்சித்தமிழ், முத்தமிழ், தனித்தமிழ் ,தேன்தமிழ், நற்றமிழ் ,

அறிவியல் தமிழ்,  என பன்முகப்பரிமாணம் கொண்ட,


இனிமைத்  தமிழ் மொழி எமது...!!

இனிமை மங்காத தமிழ் என சங்கே முழங்குவோம்…!!


வாழ்க  தமிழ்மொழி..!! வளர்க செம்மொழி..,!!

வாழிய வாழியவே..!!


(எழுத்தாளர்  பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார்.  கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். சாதனைப் பெண், தங்கத் தாரகை, கவிஞாயிறு உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்).