சிந்தனைச் சிதறல்.. வாய்ப்புகளுக்காக காத்திருங்கள்.. கிடைத்தால் விடாதீர்கள்
- அ. தாமஸ்
வாய்ப்புகளுக்காக காத்திருங்கள் அதே நேரத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை ஒருபோதும் தவற விடாதீர்கள். ஏனெனில் அவை வாய்ப்புகள் மட்டுமல்ல நம் வாழ்க்கை.
வாய்ப்புகள் மீண்டும் மீண்டும் கிடைக்கும் .ஆனால் நாம் அன்று இழந்த அதே வாய்ப்பு நிச்சயமாக மீண்டும் கிடைக்கப் போவதில்லை. ஆம் ஒவ்வொரு வாய்ப்பும் தனித்துவமானது நாம் தவிர்க்கும் ஒவ்வொன்றுக்கும் தனி விலை உண்டு என்பதை மறந்து விடாதீர்கள்.
சிறு மழைத்துளிகள் தான் இன்று பெருங்கடலாய் விரிந்து நிற்கிறது. ஆம் வாய்ப்புகள் என்பதே அளப்பரியதுதான் அதனை சிறியது பெரியது என்று உதாசீனப்படுத்தி விடாதீர்கள். ஏனெனில் இன்று நாம் உதாசீனப்படுத்தும் சிறு வாய்ப்புகள் நாளை நாமே எதிர்பார்க்காத அளவிற்கு நம்மை உருக்குலைத்து விடும்.
வாய்ப்பு கிடைத்தவர்கள் எல்லாம் வென்றவர்கள் அல்ல; ஆனால் வென்றவர்கள் எல்லாம் அவ் வாய்ப்புகளுக்காக தன் உடல், பொருள், நேரம், உறவு என அனைத்தையும் அர்ப்பணித்தவர்கள்.
வாய்ப்புகளுக்காக காத்திருங்கள்;ஆனால் வாய்ப்புகளுக்காக மட்டுமே காத்திராதீர்கள்.வாய்ப்புகளை உருவாக்குங்கள் அவ்வாய்ப்புகள் உங்களையே உலகறிய உருமாற்றும்.