சிந்தனைச் சிதறல்.. கற்றுக் கொடுத்தோம்.. கற்றுக் கொள்கிறோம்.. காலத்தின் கட்டாயம்!

Su.tha Arivalagan
Jul 27, 2026,12:16 PM IST

- அ.தாமஸ்


உதவும் உயரிய குணத்தையும் உறவுகள் பேணும் உன்னதத்தையும் உலகுக்கு உணர்த்திய மானுடம் இன்று உதவியை மரங்களிடமும், உறவுகள் பேணும் உன்னதத்தை பிற விலங்குகளிடமும் கற்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. ஆம் இது காலத்தின் கட்டாயம் தான் கற்றுக் கொடுத்தோம் கற்றுக் கொள்கிறோம்.


மரங்கள் இருப்பதில் கொடுப்பதில்லை இருப்பதையே கொடுக்கிறது இருந்தும் கொடுத்ததை நினைத்து தற்பெருமை பேசுவதில்லை. ஆனால் மானுடம் இருப்பதை கொடுப்பதைக் காட்டிலும் பிறரிடம் எடுத்ததைக் கொடுப்பதில் கூட பெருமிதம் கொள்கிறது. எனவே தான் உதவுவதில் சிறு ஊடகமாய் இருப்பவன் கூட தன்னை உயர் மானுடமாய் எண்ணி சிலாகிக்கிறான்.


ஒரு காலத்தில் இருப்பதைக் கொடுத்து மகிழ்ந்த சமூகம் இன்று எடுப்பதைக் கொடுப்பதிலும் மகிழ்கிறது; நம்மிடமிருந்து வலுக்கட்டாயமாக எடுக்கப்பட்டது மீண்டும் கிடைக்கையிலும் மகிழ்கிறது; ஏதோ ஒன்று கிடைத்தால் போதும் என்று மனம் நிறைகிறது.




விலங்குகள் தன் சக உறவுகளுக்கு இயன்றதை உதவுகிறது இல்லையேல் இயன்றவரின் மூலம் உதவுகிறது. எந் நிலையிலும் உதவுவதில் மட்டும் அது சமரசம் செய்வதே இல்லை. ஆனால் நாம் உள்ளன்போடு உதவுபவனை உதாசீனப்படுத்துகிறோம். உதவியை மறுப்பவனையோ உயரிய உறவாய் மதிக்கிறோம். எனவேதான் இன்று உதவிகள் கூட உருமாறிவிட்டது.


நம் உதவும் குணத்தையும் உறவைப் பேணும் உன்னதத்தையும் முற்றாய் அழித்தது காரணம் கூறுவதில் கருத்தேற்றியதுதான். நினைத்ததை முடிக்கும் திண்ணம் நம் எண்ணத்திற்கு உண்டு எனவே முதலில் நினைப்போம்; நினைப்பதை முடிப்போம்; அதன் நினைவில் நிலைப்போம்; அது தரும் மகிழ்வினில் தினம் தினம் திளைப்போம்.


(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)