சிந்தனைச் சிதறல்.. உமிழ்ந்திடும் நீராக இல்லாமல் உறிஞ்சிடும் நீராக இருப்போம்!
Jun 13, 2026,11:49 AM IST
- அ. தாமஸ்
உமிழ்நீரின் உன்னதம் உணராமல் உமிழ்ந்திடும் உலகம் இளநீரின் சுவைக்காக உணர்ந்தே உறிஞ்சிடும். எனவே உமிழ்ந்திடும் நீராக இல்லாவிட்டாலும் உறிஞ்சிடும் நீராக இருப்போம்; எந்நிலையிலும் நம் நிலையை பிறர் அறியப் படைப்போம்; இன்று உமிழ்பவர்கள் நாளை உறிஞ்சலாம் அல்லவா?
தன்னிலை மாறாமல் தகவமைப்பதில் நீருக்கு இணை நீர் மட்டுமே.எனவே இயன்றவரை நாமும் நீராக இருப்போம் எந்நிலையிலும் நம் நிலை மாறாமல் அந்நிலைக்கும் நம்மைத் தகவமைக்க.
பல வண்ணம் இணைத்தாலும், பல்சுவை ஊட்டினாலும் நீர் நீராகவே இருக்கிறது. எந்நிலையிலும் தன் சுயத்தை இழக்காமல் இணைத்ததை இழப்பதிலும் துணிகிறது. எனவே நாமும் நீராக இருப்போம் என்றும் நம் சுயத்தை இழக்காமலே இணைத்ததை இழக்க.
எக்கறையையும் அக்கறையை ஏற்காமலேயே கலைக்கிறது நீர் அதன் மீது கொண்ட அக்கறையால். எனவே நாமும் எக்கறையையும் கலைவோம் அக்கறையோடு அக்கறை ஏற்காமல்.
(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)