சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!
உழைப்புக்கு நம்மை உரமாக்கினால், அது நம்மை உயர்தரமாக்கும்! சிலர் நம் உழைப்பின் மதிப்பை உணரவில்லை என்பதற்காக, நம் உழைப்பு மதிப்பற்றுப் போய்விடுவதில்லை. உழைப்பின் மகத்துவம் என்னவென்று அறியாதவர்களிடம், நம் உழைப்பின் மதிப்பை எதிர்பார்ப்பதில் நியாயம் இல்லை தானே?
உழைக்காத மாடுகள் உண்டு கொழுத்து ஊர் சுற்றித் திரியும் பொழுது, உழைக்கும் மாடுகள் தான் உதைபட்டுச் சாகின்றன. இருக்கும் பொழுது தெரியாத அவற்றின் மதிப்பு, அவை இறந்த பின்னரே தெரிகிறது, பலருக்கும். ஆம்! உழைப்பையும், உழைப்பவர்களையும் மதிப்பிடத் தெரியாத சிலரால் இத்தகைய அவலங்கள் அரங்கேறத்தான் செய்கின்றன. நாம் இத்தகையவர்களை நினைத்துக் கலங்கி நிற்பதை விட, அவர்களைக் கடந்து செல்வதே மேலானது.
உழைக்கும் ஒவ்வொருவரும் பலன் தரும் பசும்மரங்கள்! பழம் தரும் மரங்களை நோக்கியே கற்கள் எறியப்படுகின்றன; யாரும் பட்ட மரத்தை நோக்கி கல்லெறிவதில்லை. அதுபோல, உங்களை நோக்கி வரும் விமர்சனங்களைக் கண்டு கலங்காதீர்கள். அவை உங்கள் மதிப்பைக் குறைப்பவை அல்ல; மாறாக, நீங்கள் உயிர்ப்போடு இருக்கிறீர்கள் என்பதற்கான அடையாளங்களே!
உங்களுக்கு எதிரான விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றுவதை விட, சிறு புன்னகை ஒன்றையே விதைத்து விட்டுச் செல்லுங்கள். உங்களின் அந்தச் சிறு புன்னகை, உங்களுக்கு எதிரானவர்களின் சிந்தனையைச் சிதறடிக்கும்; நாளைய உலகின் நாயகர்களாக உங்களை உயர்த்திப் பிடிக்கும்!
(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)