சிந்தனைச் சிதறல்.. சுமை என நினைக்கையில் சுகத்தினைத் தொலைக்கிறோம்!

Su.tha Arivalagan
Aug 01, 2026,02:28 PM IST

- அ. தாமஸ்


நம் பிறப்பு முதல் இறப்பு வரை, சுமை, சுமை என நினைக்கையில் சுகத்தினைத் தொலைக்கிறோம்; சுகம் என நினைக்கையில், சுமையையும் ரசிக்கிறோம். 


வயிற்றில் நம்மையும், கையில் பையையும் சுமந்தாலும், கையில் உள்ளதைச் சுமை எனக் கருதும் தாய், வயிற்றில் உள்ளதைச் சுகமாகவே கருதுகிறாள். சுகம் எனச் சுமந்தவளை, சுமை எனக் கருதுவது நியாயம் இல்லை தானே?


தகுதியற்ற நீரைக் குடித்தும், தகுதியான பாலை கொடுப்பவளும்; கிடைப்பவை அனைத்தையும் உண்ணாமல், மகவுக்கென காத்துக் கொடுப்பவளுமே தாய். இல்லாதபோது தேடிக் கொடுத்து நம்மைக் காத்தவளுக்கு, நம்மிடம் இருக்கும் போது தேடித் தேடி கொடுப்போம். அவளின் தேவையை அறிந்து காப்போம்.




தாயில்லா வாழ்க்கை, சொர்க்கத்தில்கூட நரகத்தைக் கற்பிக்கிறது; தாயோடு வாழ்க்கை, நரகத்தைக்கூட சொர்க்கமாகவே காண்பிக்கிறது. தாய் அன்புக்கு நிகர் தரணியில் இல்லை. அப்படி கருணையோடு, அன்பை அளவின்றி கொடுத்தவள்தான் இன்று உணவுக்காகவும், உறவுக்காகவும், நல் உணர்வுக்காகவும் காத்துக் கிடக்கிறாள். எனவே, மிகுதியாக இல்லாவிட்டாலும், தகுதியோடு கொடுப்போமே.


நாம் அறியாதபோது அறிவைப் புகட்டியவளைத்தான், அறிந்துவிட்டோம் என்பதற்காக காணாமலே கடக்கிறோம். விதை இல்லா மரங்கள் இல்லை; அவள் இல்லையேல் நாம் இல்லை என்பதை மறவாது தினம் தினம் நினைப்போம். அவளின் நினைவினில் திளைப்போம்.


(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)