சிந்தனைச் சிதறல்.. வடிப்பது சிற்பம் தான் என்றாலும்.. சிறுகச் சிறுக சிதைக்கும் உளிகள்!

Su.tha Arivalagan
Sep 09, 2026,03:32 PM IST

- அ.தாமஸ்


கல் உடைத்து சிலை வடிக்கும் சிற்பியின் கை உளிகள் கூட சிந்தித்தே சிதைக்கிறது. வடிப்பது சிற்பம் தான் என்றாலும், வலிக்கும் என்று சிறுகச் சிறுகவே சிதைக்கிறது.  அச்சிதைவிலும்  வழிபடும் சிலையையே வடிக்கிறது.


சில மானிடப் பதர்கள் மட்டும்தான், சக மனிதனுக்கும் வலிக்கும் என்பதையே மறந்துவிட்டு, மீண்டும் மீண்டும் வலி கொடுக்கவே நினைக்கின்றனர். வலியில் துடிப்பதையும் கூட  முக மலர்ச்சியோடு ரசிக்கின்றனர்.


உளியிடம் இருக்கும் கருணை கூட சில மனிதரிடம் மரத்துப் போய்விட்டது. இந்நிலை அறிந்தால், மரம் கூட இத்தகு மானுடர்களை நினைத்து வெறுத்துப் போய்விடும்.




தம் உழைப்பை உயர்த்திப் பிடிக்கும் சிலர், மற்றவர்களின் உழைப்பையும் உணர்வையும் நினைக்க மறுப்பதால்தான், தமக்கு வலிப்பது போல் பிறருக்கும் வலிக்கும் என்பதையே மறந்து போகின்றனர். 


உணர்வும், உழைப்பும், வலியும், ரணமும் உயிருள்ள யாவருக்கும் உரியதே என்பதை உணர்வோம்; பிறரின் உழைப்பையும் உணர்வையும் மதித்து,அவர்களையும் உயரிய நல் உறவாகக் கருதுவோம்.


(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)