சிந்தனைச் சிதறல்... மதிப்பு என்பது நாம் வகிக்கும் பதவியைப் பொறுத்து வருவதில்லை!

Su.tha Arivalagan
Aug 26, 2026,03:10 PM IST

- அ. தாமஸ்


முறையான பட்டறிவும் படிப்பறிவும் பெறாதவருக்குக் கிடைக்கும் பதவியானது உயிரற்ற உடலுக்கு வழங்கப்படும் அலங்காரம் போன்றது. பதவியால் அவர் மதிப்புப் பெறுவார்; அதே நேரத்தில் அவரால் அந்தப் பதவியே பேரழிவையும் இழிவையுமே சந்திக்கும்.


நன்கு கற்றவர்தான்  கற்ற கல்விக்கு நிகரான பதவிக்குச் செல்லாவிட்டாலும்கூட, எல்லாச் சூழல்களிலும் அவர் கற்ற கல்வியும் பெற்ற அனுபவமும் அவருக்கான மதிப்பைக் கொடுக்கத் தவறுவதே இல்லை.




மதிப்பு என்பது நாம் வகிக்கும் பதவியைப் பொறுத்து வருவதில்லை. நமது சொல்லாலும் செயலாலுமே கிடைக்கிறது. ஆனால், நாம்தான் நம் பதவிக்குக் கிடைக்கும் மதிப்பைக்கூட நமக்குக் கிடைப்பதாக நினைத்து, தொடர்ந்து தவறான செயல்களை முன்னெடுப்பதிலேயே முனைகிறோம். இத்தகைய செயல், நாம் பதவியில் இருக்கையில் பல்லிளிக்கும்; பதவி துறக்கையில் பல் எடுக்கும்.


சில நேரங்களில், முட்டாள்கள் படித்த முட்டாள்கள் என்றும், யாசகர்கள் படித்த யாசகர்கள் என்றும், திருடர்கள் படித்த திருடர்கள் என்றும், தம் தவறான செயல்களில் கற்ற கல்வியின் நுட்பங்களைப் பயன்படுத்தி தம்மையும் தம் தவறான செயல்களையும்கூட தனித்துவப்படுத்துகிறார்கள். ஆம், கல்வி எந்நிலையிலும் தன்னிலை இழப்பதே இல்லை. எனவே, கணக்கின்றிக் கற்போம்; பிறருக்குத் தன்னலமின்றிக் கொடுப்போம்.


(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)