எடப்பாடி பழனிச்சாமி குறித்து இயல்பை மீறி பேசி விட்டேன்.. வருத்தம் தெரிவிக்கிறேன்.. ஆதவ் அர்ஜூனா
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து தான் பேசியதாக வெளியான வீடியோ காட்சிகளுக்காக உண்மையாகவும், நேர்மையாகவும் தனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதாக தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பிரிவு துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.
ஆதவ் அர்ஜூனா மற்றும் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் பேசிக் கொண்டே நடப்பது போல ஒரு வீடியோ காட்சி சமீபத்தில் வெளியானது. அதில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் குறித்து கருத்து தெரிவித்தபடி வருகிறார் ஆதவ் அர்ஜூனா. அதில் எடப்பாடி பழனிச்சாமி குறித்து கேலியாக ஒருமையில் அவர் பேசிய வார்த்தைகள் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தன.
அதிமுக மேலிடத் தரப்பில் எந்தவிதமான கருத்தும் இதற்கு வெளிப்படுத்தவில்லை என்றாலும் கூட அதிமுகவினர் சமூக வலைதளங்களில் ஆதவ் அர்ஜூனாவை கடுமையாக சாடி வருகின்றனர். தவெகவிலும் கூட ஆதவின் இந்த பேச்சு அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து தற்போது தனது பேச்சுக்காக வருத்தம் தெரிவித்துள்ளார் ஆதவ் அர்ஜூனா. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
அனைவருக்கும் வணக்கம்,
எனது தனிப்பட்ட உரையாடல் குறித்த காணொளி ஒன்று பொதுவெளியில் வெளியானது. ஜனநாயகத்தின் மீது எப்போதும் நம்பிக்கை கொண்டவன் நான். அதைத் தாண்டி, எந்தவித தனிநபர் தாக்குதலையும், முரண்பாடுகளையும் எப்போதும் எனது பொதுவாழ்வில் நான் கடைப்பிடித்தது கிடையாது. என்னுடன் பயணிப்பவர்களுக்கு அது நன்கு தெரியும்.
என்னுடைய அரசியல் பயணத்தில் எத்தனையோ விமர்சனங்கள், தனிப்பட்ட தாக்குதல்கள் எல்லாம் என் மீது முன்வைக்கப்படும் பொழுது, எந்த இடத்திலும், யார் மீதும் தரம் தாழ்ந்த விமர்சனங்களை நான் வைத்தது கிடையாது.
உண்மையும், நேர்மையும் கொண்ட ஒரு புதிய மக்கள் அரசியலைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற ஆவலுடனே நான் இந்த அரசியல் களத்திற்கு வந்தேன். தனிமனித விமர்சனங்கள் ஜனநாயக அரசியலுக்கு அழகல்ல எனும் கொள்கையை உறுதியாகக் கொண்டுள்ளேன். அப்படியிருக்கையில், அந்த காணொளியில் வெளியான வார்த்தைகள் எனது இயல்பை மீறியது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதற்காக, உண்மையாகவும், நேர்மையாகவும் எனது வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஜனநாயகப்பூர்வ பொது வாழ்வில் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நிகழ்வையும் எனது அரசியல் வாழ்வில் ஒரு கற்றலாகவே நான் எடுத்துக்கொள்கிறேன். அந்தவகையில், கொள்கைக்கான அரசியலையும், வெளிப்படைத்தன்மையான ஜனநாயகத்தையும் என்றும் மதித்து பயணிப்பதே எனது இலக்கு என்று அவர் கூறியுள்ளார்.