ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்.. காவிரிக் கரைகளில் விழாக்கோலம்.. தாலி மாற்றி பெண்கள் மகிழ்ச்சி!

Su.tha Arivalagan
Aug 03, 2025,09:09 AM IST

திருச்சி: தமிழ்நாடு முழுவதும் இன்று ஆடிப் பெருக்கு என்று அழைக்கப்படும் பதினெட்டாம் பெருக்கு வைபவம் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக காவிரிக் கரையோரப் பகுதிகள் அனைத்தும் விழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது.


ஆடி மாதம் 18ம் நாளை ஆடிப் பெருக்கு அல்லது பதினெட்டாம் பெருக்கு என்று கொண்டாடுவது வழக்கம். நிலங்களையும், மக்கள் வாழ்வையும் வளம் பெறச் செய்யும் தண்ணீர்த் தாய்க்கு வணக்கம் சொல்லி நன்றி சொல்லும் விழாவாக இது கொண்டாடப்படுகிறது.




இந்த நாளில் ஆற்றங்கரையோரங்களில் படையல் இட்டு, தாலிக் கயிறுகளை மாற்றி மக்கள் இதை எழுச்சியுடன் கொண்டாடுவார்கள். குறிப்பாக காவிரி ஆறு கரைபுரண்டோடும் இந்த சமயத்தில் காவிரிக் கரையோரங்களில் ஆடிப் பெருக்கு உற்சாகமாக கொண்டாடப்படும்.


அந்த வகையில் இன்றும் ஈரோடு, திருச்சி, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட அனைத்துக் காவிரி, கொள்ளிடக் கரையோரப் பகுதிகளில் மக்கள் உற்சாகமாக ஆடிப் பெருக்கைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.  காவிரி ஆறு மட்டுமல்லாமல் அதன் கிளை ஆறுகள், காவிரிக் கால்வாய்கள் உள்ளிட்ட அனைத்து நீர் நிலைகளும் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.


சிதம்பரத்தில் உள்ள கான்சாகிப் கால்வாயிலும் மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து ஆடிப் பெருக்கை கொண்டாடி மகிழ்ந்தனர். புதுமணத் தம்பதியரும் குடும்பத்தோடு வந்து தாலிக் கயிறு மாற்றி ஆடிப்பெருக்கை கொண்டாடி மகிழ்ந்தனர்.




அதேபோல  தாமிரபரணி உள்ளிட்ட பிற ஆற்றங்கரையோரப் பகுதிகளிலும் ஆடிப் பெருக்கு விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.


திருச்சி அருகே முக்கொம்பு பகுதியில் இன்று விடுமுறை மற்றும் ஆடிப் பெருக்கு என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. காவிரி ஆறு தற்போது கரைபுரண்டு ஓடுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.


புகைப்படங்கள்: இந்திரா அய்யப்பன், சிதம்பரம்