முழு மனதோடு என்டிஏ கூட்டணியில் இணைந்திருக்கிறேன்...தினகரன் அதிரடி
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைந்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தனது அரசியல் நிலைப்பாடு மற்றும் எதிர்காலத் திட்டம் குறித்து விரிவான பேட்டியளித்துள்ளார்.
கூட்டணி குறித்துப் பேசிய டிடிவி தினகரன், "நான் இந்தத் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு முழு மனதோடு வந்திருக்கிறேன். கடந்த காலங்களில் எங்களுக்குள் இருந்த கசப்பான சம்பவங்களையும், எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் முழுமையாகத் தூக்கி எறிந்துவிட்டு, ஒருமித்த கருத்துடன் இந்த முடிவை எடுத்துள்ளோம்," என்று தெரிவித்தார்.மேலும், தங்களுக்குள் இருந்த 'பங்காளிச் சண்டைகளை' ஓரம் வைத்து விட்டு, தற்போதைய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு அனைவரும் ஒன்றிணைந்திருப்பதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்துவதில் அமமுக ஒரு முக்கியத் தூணாகச் செயல்படும் என்று குறிப்பிட்ட அவர், கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தங்களுக்குக் கிடைக்காமல் போன வெற்றியை இந்த முறை ஈடுகட்டப் போவதாக உறுதிபடக் கூறினார்."2021-ஆம் ஆண்டு அமைக்கத் தவறிய மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஆட்சியை, இந்த முறை நாம் அனைவரும் இணைந்து அமைத்தே தீருவோம். அதற்கான உறுதுணையாக அமமுக இருக்கும்."
இந்தக் கூட்டணியின் மூலம் தமிழகத்தில் ஒரு வலுவான அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். குறிப்பாக, கடந்த காலப் பிணக்குகளை மறந்து, ஒரு இலக்கை நோக்கிப் பயணிப்பதே தற்போதைய அவசியம் என்பதை அவர் தனது பேட்டியின் மூலம் வலியுறுத்தியுள்ளார்.மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் முன்னிலையில் டிடிவி தினகரன் என்டிஏ கூட்டணியில் இணைந்ததுடன், செய்தியாளர்களையும் சந்தித்துள்ளார்.