ஆத்துக்குள்ளே ஒரு ஆட்டம்!
- தமிழ்மாமணி இரா.கலைச்செல்வி
மாலை அஞ்சு மணி இருக்கும். லலிதா மாமி மாடிப் போர்ஷனிலே ஒரே ஆர்ப்பாட்டம்..
மாமி, மாதுவைப் பார்த்து, “ ஏண்டி இன்னிக்கு காலேஜ் லீவ்-னா, கொஞ்சமாவது ஆத்திலே எனக்கு ஒத்தாசை பண்ணப் படாதா?”ன்னு கத்தினாள். அச்சமயம் பார்த்து, சுந்தரம் மாமா கூப்பிட்டார், “ஏண்டிமா! லலிதா இங்க வா, ஆத்துக்கு யாரோ வந்திருக்கா போல இருக்கு!”
மாமி, எட்டி பார்த்தாள். வாசல்லே ஒரு ஆசாமி... கூட ஒரு மாமி.
எழுந்து வந்த சுந்தரம் மாமா, “ இவா தான் நம்ம கணேஷ் அய்யர் சொன்னவா.”
மாமிக்கு ‘பகீர்’ன்னு ஆயிடுத்து. “அடடா! ஒரு வார்த்தை முன்னாடியே சொல்லக் கூடாதா? ஆத்திலே பால்கூட இல்லையே! ”
“வாங்கோ, வாங்கோ! உள்ளே வாங்கோ!”
“இல்ல. நாங்க வந்து.....” கூறுவதற்குள். “எல்லாம் தெரியும். வாங்கோ. மாது ஆத்துல தான் இருக்கா.”
மாமி, மெதுவா ஹாலுக்கு வந்து, “மாது, நன்னாவே பாடுவா. பையன் வரலையோ . மாது நீ அந்தச் பாட்டை பாடிக்காட்டிண்டே இரு, நான் வந்துடுறேன்!”ன்னு சொல்லி, பக்கத்து வீட்டிற்கு பால் வாங்க சென்றாள்.
வந்தவாளுக்கு மாமியோட பாவனையும், மாதுவோட பாட்டும் ஒண்ணும் புரியலை. “
அய்யர்வாள் நாங்க இன்னும் நிறைய வீட்டுக்கு போகணும் எனக்கூறி ,நன்கொடை வசூல் புத்தகத்தை நீட்டியவுடன் , சுந்தரம் மாமா திடுக்கிட்டார்.
“நீங்க… மாதுவை பெண் பார்க்க வரலையோ!!!”
(எழுத்தாளர் பற்றி ... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அரசு அதிகாரி ஆவார் . அவரின் கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும் , வாசிப்பின் மீதும், தீராக் காதல் கொண்ட அவர், நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒளிபரப்பாகி உள்ளன. கதைகளைத் தவிர, கவிதைகளும், ஆய்வு கட்டுரைகளையும் அதிகம் எழுதி வரும் இவர் உளவியலில் முதுகலை பட்டமும் பெற்றவர் . சாதனைப் பெண், தமிழ் மாமணி, தங்கத்தாரகை, சேவா ரத்னா , கவிஞாயிறு, கவியருவி, கவிச்செம்மல், உழைப்பாளர் திலகம், மகாகவி, செம்மொழி கலைஞர் விருது போன்ற 15 க்கும் மேற்பட்ட விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.)