பேச வேண்டிய நேரத்தில் பேட் பேசும்.. சுனில் கவாஸ்கரின் வாயை.. அதிரடியாக மூடிய அபிஷேக் சர்மா!
அகமதாபாத்: சுனில் கவாஸ்கரின் விமர்சனங்களுக்குத் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் அபிஷேக் சர்மா பதிலடி கொடுத்துள்ள விதம் கிரிக்கெட் வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது.
சமீபத்திய போட்டிகளில் அபிஷேக் சர்மா சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தபோது, சுனில் கவாஸ்கர் அவரைக் கடுமையாக விமர்சித்திருந்தார். குறிப்பாக, அபிஷேக் சர்மாவிடம் திறமை இருக்கிறது, ஆனால் அவர் தேவையற்ற ஷாட்களை ஆடி விக்கெட்டைப் பறிகொடுக்கிறார். அதிகப்படியான ஆக்ரோஷம் அவரது பேட்டிங்கைப் பாதிக்கிறது. ஒரு சர்வதேச வீரராக அவர் தனது ஷாட் தேர்வுகளில் இன்னும் முதிர்ச்சியைக் காட்ட வேண்டும்.
அவர் தனது தவறுகளை இன்னும் திருத்திக் கொள்ளவில்லை. எனவே அவரை இறுதிப் போட்டியில் சேர்க்கக் கூடாது என்று கவாஸ்கர் குறிப்பிட்டிருந்தார். ஆனாலும் இன்றைய இறுதிப் போட்டியில் அபிஷேக் சர்மா இடம் பெற்றார். அத்தோடு இல்லாமல் அதிரடியான ஆட்டத்தையும் வெளிப்படுத்தினார் அபிஷேக் சர்மா.
தனது வழக்கமான பாணியை மாற்றாமல், அதே சமயம் அதிகப் பொறுப்புடன் விளையாடி ரன்களைக் குவித்தார். 21 பந்துகளில் 51 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார் அபிஷேக் சர்மா. இந்திய அணிக்கு அருமையான தொடக்கத்தையும் அவர் ஏற்படுத்திக் கொடுத்தார்.
பவர்பிளே ஓவர்களில் பந்துவீச்சாளர்களை நிலைகுலையச் செய்யும் தனது இயல்பான ஆட்டத்தைத் தொடர்ந்தார். வெறும் சிக்ஸர்களை மட்டும் நம்பியிருக்காமல், களத்தின் அனைத்து திசைகளிலும் பந்துகளை விரட்டித் தனது திறமையை நிரூபித்தார்.
நெருக்கடியான நேரங்களில் அரைசதம் மற்றும் முக்கியமான இன்னிங்ஸை ஆடி, தான் ஒரு "ஒன்-மேட்ச் ஒண்டர்" அல்ல என்பதை மெய்ப்பித்தார். கவாஸ்கர் போன்ற ஜாம்பவான்கள் வைக்கும் விமர்சனங்களை இளம் வீரர்கள் எவ்வாறு கையாள வேண்டும் என்பதற்கு அபிஷேக் சர்மா ஒரு உதாரணமாகத் திகழ்கிறார் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
"பேச வேண்டிய நேரத்தில் பேட் பேசும்" என்பதற்கு இன்று அபிஷேக் சர்மா ஒரு உதாரணம் என்று சொல்லலாம்.