நடிகர் தர்மேந்திரா நலமாக இருக்கிறார்.. வதந்திகளை நம்பாதீர்கள்.. மகள் ஈஷா தியோல் கோரிக்கை

Su.tha Arivalagan
Nov 11, 2025,10:37 AM IST

மும்பை: பிரபல நடிகர் தர்மேந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் குறித்து சிலர் பரப்பிய தகவல்கள் குறித்து மனைவி ஹேமமாலினி மற்றும் மகள் ஈஷா தியோல் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தனது தந்தை நலமாக இருப்பதாக அவரது மகள் ஈஷா தியோல், உறுதிப்படுத்தியுள்ளார்.


திங்கட்கிழமை மாலை, மூச்சுத்திணறல் காரணமாக தர்மேந்திரா மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தி பரவியதும், அவர் குறித்த வதந்திகள் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல பரவின.  ஆனால், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ஈஷா தியோல் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஊடகங்கள் மிகைப்படுத்தி செய்திகளை பரப்புகின்றன. தவறான செய்திகளை பரப்புகின்றன. என் அப்பா நலமாக இருக்கிறார், குணமடைந்து வருகிறார். எங்கள் குடும்பத்திற்கு தனிப்பட்ட சுதந்திரம் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். அப்பா விரைவில் குணமடைய நீங்கள் செய்யும் பிரார்த்தனைகளுக்கு நன்றி." என்று பதிவிட்டார்.




தர்மேந்திராவின் மகன் சன்னி தியோலின் குழுவும் திங்கள்கிழமை மாலை ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், "திரு. தர்மேந்திரா நலமாக இருக்கிறார், மருத்துவக் கண்காணிப்பில் இருக்கிறார். மேலும் தகவல்கள் கிடைக்கும்போது பகிரப்படும். அவரது உடல்நிலை குறித்து தவறான வதந்திகளைப் பரப்புவதில் ஈடுபட வேண்டாம். அவரது விரைவான குணமடைதலுக்காக பிரார்த்தனை செய்யுமாறும், குடும்பத்தின் தனிப்பட்ட சுதந்திரத்தை மதிக்க வேண்டும் என்றும் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்." என்று தெரிவித்தது. இதனால், தர்மேந்திராவின் ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.