எனக்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டுக்கு நன்றி: நடிகர் கமல்ஹாசன் உருக்கம்
சென்னை: எனக்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டுக்கு நன்றி என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் தக் லைஃப். இப்படத்தில் நடிகர் சிம்பு முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் நடித்துள்ளனர். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். 2 மணி நேரம் 45 நிமிடம் கொண்ட இப்படம் ஜூன் 5-ஆம் தேதி (நாளை) வெளியாகவுள்ளது.
இந்நிலையில், சென்னையில் தக் லைப் பட நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்கள் சந்தித்து பேசுகையில், எங்கள் பயணத்தில் ஆரம்பம் முதல் எங்களைத் தாங்கிப் பிடித்து இந்த மேடை வரை கொண்டு சேர்த்ததில் பெரும் பங்கு உங்களுக்கு உண்டு. அது மறுக்க முடியாத உண்மை. உங்கள் எதிர்பார்ப்பை உங்களின் கண்கள் மூலமே காண்பிக்கிறீர்கள். கத்துக்கிட்டு வந்தவங்க தான் இங்க இருக்காங்க. டெக்ஸிசியனாகட்டும் நடிகர்களாகட்டும். இங்க கத்துக்க வந்தவங்க கிடையாது.
ஒரு சின்ன சீனை எடுப்பதற்கு 50 பேர் வேலை பார்த்துள்ளார்கள். திரை முழுவதும் ஒரு முகம் இருக்கும். எங்களுக்கு கிடைத்த படை வீரர்கள் திறமை நிறைந்த படை வீரர்கள். தக்லைஃக் திரைப்படம் சர்வதேச தரத்தில் உருவாகியுள்ளது. தமிழ் சினிமாவை புரட்டு போடும் அளவுக்கு படம் எடுக்க எனக்கு நீண்ட நாள் ஆசை. அதை செய்ய முயற்சி செய்து கொண்டு இருக்கோம். எல்லா நேரமும் தூக்க முடியாது யாராவது உதவிக்கு வேணும். தமிழ் சினிமாவை புரட்டி போடுவது என்பது பெரிய விஷயம். கொஞ்சமாவது நாங்கம் விரும்பும் திசை நோக்கி நடத்தலாம் என்று முயற்சித்துள்ளோம். நான் பார்த்த இளைஞர் மணி இன்றைக்கு சினிமா ஞானியாக மாறியிருக்கிறார். அவருடன் வேலை பார்த்தது எனக்கு குதுகலமாக இருந்தது.
தமிழ்நாடு எனக்கு உறுதுணையாக உள்ளது. தமிழ்நாட்டிற்கு நன்றி. எனக்கு உறுதுணையாக நின்ற தமிழ்நாட்டிற்கு நன்றி. உயிரே, உறவே, தமிழே என விழா மேடையில் பேசிய வார்த்தைக்கு முழு அர்த்தத்தை தற்போது புரிந்து கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.