RIP Rajesh: தனக்குத் தானே கட்டிய கல்லறையில் நடிகர் ராஜேஷின் உடல் அடக்கம்!
சென்னை: தனக்கு தானே கட்டிய கல்லறையில் நடிகர் ராஜேஷின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகர் ராஜேஷ் ஹீரோவாகவும், குணச்சித்திர வேடங்களிலும் சுமார் 170க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். திரை உலகில் 45 ஆண்டுகளாக பணியாற்றிய ராஜேஷ் நடிகர் எஸ்.எஸ்.ஆருக்கு பிறகு தமிழை சுத்தமாக உச்சரித்தவர். 7 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றியதால் தமிழ் மீது தனக்கு தனி ஆர்வம் இருப்பதாக பல பேட்டிகளில் தெரிவித்திருந்தார். ராஜேஷின் இறப்பிற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் வருத்தம் தெரிவித்து வருகிறார்கள்.
தன்னுடைய 40தாவது வயதிலேயே தனக்கு தானே கல்லறை கட்டிக் வைத்திருப்பதாக ராஜேஷ் முன்பு கூறியிருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஒரு முறை லண்டன் சென்று இருந்தேன். அப்போது காரல் மார்க்ஸ் கல்லறையை பார்த்தேன். அந்த கல்லறை எனக்கு பிடித்து விட்டது. அந்த கல்லறையில் நின்று நான் ஒரு போட்டோ எடுத்துக் கொண்டேன். அதற்கு அடுத்த வருடமே எனக்கு நானே கல்லறை கட்டிக் கொண்டேன்.
கல்லறையில் அவருடைய குடும்பத்தினரும் அடுத்தடுத்து அடக்கம் செய்யும் விதமாக இருக்கும். அதே போல என் குடும்பத்தினரை அடுத்தடுத்து அடக்கம் செய்யும் விதத்தில் கல்லறையை மார்பிள் வைத்து கட்டி இருக்கின்றேன். என்னுடைய கல்லறை எப்படி இருக்க வேண்டும் என்று நான் இறந்த பிறகு பார்க்க முடியாது. அதனால் இதுதான் என்னுடைய கல்லறை என்று நானே பார்த்துக் கொள்ளும் வகையில் தான் அந்த கல்லறையை கட்டி இருக்கேன் என்று தெரிவித்திருந்தார்.
அந்தக் கல்லறையில்தான்று நடிகர் ராஜேஷின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. சென்னை ராமாபுரம் இல்லத்திலிருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட உடலுக்கு, அசோக் நகர் திருச்சபையில் ஆராதனை முடிந்த பின், கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறையில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.