நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
சென்னை: நடிகர் ரோபோ சங்கர் படப்பிடிப்பில் இருந்த போது மயக்கமடைந்த நிலையில் நேற்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து இன்று தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.
தமிழில் சின்னத்திரை நிகழ்ச்சிகளின் மூலமாக பிரபலமானார் நடிகர் ரோபோ சங்கர். விஜய் டிவி நிகழ்ச்சிக்கு முன்னர் தர்ம சக்கரம், படையப்பா உள்ளிட்ட படங்களில் சிறுசிறு கேரக்டர்களில் நடித்துள்ளார் ரோபோ சங்கர். சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி தற்போது முன்னணி காமொடி நடிகராக வலம் வந்து கொண்டுள்ளார்.
அண்மையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சமையல் ரியாலிட்டி நிகழ்ச்சியான டாப் குக்கூ டூப் குக்கூ நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் தனது நேர்த்தியான பங்கேற்பு மூலம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வந்தார். இந்நிலையில், சென்னையில் நேற்று படப்பிடிப்பில் இருந்த போது, அவர் திடீர்ரென மயக்கி விழுந்துள்ளார். இதனையடுத்து அவர் துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். நீர்ச்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மயக்கம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தது.
இதனையடுத்து, நேற்று மாலை அவரது உடல்நிலை பின்னடைவை சந்தித்த நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மருத்துவர்கள் மாற்றியுள்ளனர். தொடர்ந்து இன்றும் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து ரோபோ சங்கரின் உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். இந்த சம்பவம் அவரது ரசிகர்களிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.