Robo Shankar paases away: நடிகர் ரோபோ சங்கர் காலமானார்...திரையுலகினர் அதிர்ச்சி!

Su.tha Arivalagan
Sep 18, 2025,10:06 PM IST

சென்னை : பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மதுரையைச் சேர்ந்தவர் ரோபோ சங்கர். மேடை நிகழ்ச்சிகளில் மிமிக்ரி கலைஞராக, நடனக் கலைஞராக வலம் வந்தவர். விஜயகாந்த் போலவும், கமல்ஹாசன் போலவும் பேசுவதில் கில்லாடி. படிப்படியாக உயர்ந்து வந்த அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு மூலம்  புகழ் பெற்றார். அதன் பின்னர் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.


அஜித், விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தன்னுடைய நகைச்சுவையால் ரசிகர்களை கவர்ந்தவர். விஸ்வாசம், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் உள்ளிட்ட படங்களில் இவரது காமெடி பெரிய அளவில் பேசப்பட்டது.  அன்னிக்கு காலைல  6 மணி இருக்கும் என்று இவர் பேசிய காமெடி மிகப் பிரபலமானது.




கடந்த சில மாதங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட ரோபோ சங்கர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று, பிறகு உடல்நலம் தேறி, மீண்டும் சினிமாக்களில் நடித்து வருகிறார். தற்போதும் சினிமா ஒன்றில் அவர் நடித்துக் கொண்டிருந்த போது படப்பிடிப்பு தளத்தில் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நீர்சத்து குறைந்தது, குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக ரோபோ சங்கருக்கு மயக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.


இந்நிலையில் ரோபோ சங்கரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதை அடுத்து, அவருக்கு வென்டிலேட்டர் பொறுத்தப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு, தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று இரவு 9 மணியளவில் ரோபோ சங்கர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு வயது 46. இவருக்கு இந்திரஜா என்ற மகள் இருக்கிறார். இவர் பிகில் படத்தில் நடித்து பிரபலமானவர்.


ரோபோ சங்கரின் இந்த திடீர் மறைவு திரையுலகினரையும், அவரது ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அவருக்கு பலரும் அஞ்சலி செலுத்து வருகிறார்கள்.