Maman movie: ஏண்டா தம்பிகளா, மண் சோறு சாப்பிட்டா எப்படிடா படம் ஓடும்.. நடிகர் சூரி ஆதங்கம்!

Manjula Devi
May 16, 2025,05:46 PM IST

மதுரை: மாமன் படம் வெற்றியடைய வேண்டுமென மதுரையில் மண் சோறு சாப்பிட்டவர்களை தம்பிகள் என்று சொல்வதற்கே எனக்கு வெட்கமாக உள்ளது. இது வேதனையாக இருக்கிறது என நடிகர் சூரி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்


நடிகர் சூரியின் விடுதலை படத்தின் வெற்றியை தொடந்து பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மாமன். இவர் இயக்கத்தில் விலங்கு’ வெப்சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது . இதில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி  நடித்திருக்கிறார்.

இவர்களுடன், ராஜ்கிராண், சுவாசிகா, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். இப்படத்தின் கதையை சூரி எழுதியிருக்கிறார்.





இந்த நிலையில் பல்வேறு எதிர்பார்ப்புக்கு மத்தியில் சூரி நடித்த மாமன் திரைப்படம் இன்று வெளியானது.  இப்படம் ஃபேமிலி சப்ஜெக்டில் எமோஷனல் கலந்த படமாக இருப்பதால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதே சமயத்தில் படத்தின் எமோஷனல் காட்சிகளில் சூரி தனது எதார்த்தமான நடிப்பை பிரதிபலித்துள்ளார். மேலும் இயக்குனர் பிரசாத் பாண்டியராஜ் படத்தின் கதாபாத்திரத்தை வடிவமைத்த விதமும், மாமன் மருமகன் சென்டிமென்ட் காட்சிகளும், அதற்கிடையே வரும் சூரியின் மனைவி கதாபாத்திரமும் ரசியும்படி இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


இந்த நிலையில் இன்று வெளியான மாமன் திரைப்படம் வெற்றி அடைய வேண்டும் என்று ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்ட  செயல் குறித்து நடிகர் சூரி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். அதில், மாமன் படம் வெற்றி அடைய மதுரையில் மண் சோறு சாப்பிட்டவர்களை தம்பிகள் என்று செல்வதற்கு எனக்கு வெட்கமாக உள்ளது. தம்பிகளா இது ரொம்ப முட்டாள்தனமானது.  கதை நன்றாக இருந்தால் அந்த படம் ஓடும். அதை விட்டுவிட்டு மண் சோறு சாப்பிட்டால் படம் எப்படி எடுத்தாலும் ஓடிவிடுமா? என்ன. 


இந்த செய்தி மிகவும் வேதனையாக இருக்கிறது. அந்தப் பணத்திற்கு நாலு பேருக்கு தண்ணீர், மோர், உணவு, வாங்கி கொடுத்திருக்கலாம் இது போன்ற செயலை செய்பவர்கள் எனது ரசிகர்களாக இருக்கக்  கூட தகுதியற்றவர்கள் என கூறியுள்ளார்.