திண்ணையில் இல்லை நண்பா... பல நாட்கள் ரோட்டில் இருந்தவன் நான்: நடிகர் சூரியின் நச் பதில்!
சென்னை: திண்ணையில் இல்லை நண்பா... பல நாட்கள் இரவும் பகலும் ரோட்டில் இருந்தவன் நான்… அந்த பாதைகள் தான் எனக்கு வாழ்க்கையின் உண்மையும் மதிப்பையும் கற்றுத் தந்தது என்று ரசிகர் ஒருவர் அடித்த கமண்டிற்கு பதில் அளித்துள்ளார் நடிகர் சூரி.
காமெடி நடிகராக அறிமுகமான நடிகர் சூரி தற்போது நாயகனாக அவதாரம் எடுத்துள்ளார். இவர் நாயகனாக நடித்த விடுதலை, கருடன் , மாமன் படங்கள்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றுள்ளன. அது மட்டுமின்றி இவர் நடித்த கொட்டுக்காமி திரைப்படம் சர்வதேச அளவில் பல விருதுகளை வென்றது. இதனையடுத்து தற்போது இயக்குனர் மதிமாறன் இயக்கத்தில் மண்டாடி திரைப்படத்தில் நடிகர் சூரி நடித்து வருகிறார்.
நடிகர் சூரி மதுரையில் இருக்கும் ராஜாக்கூர் கிராமத்தில் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் இந்த தீபாவளிக்கு தன் குடும்பத்துடன் கொண்டாடிய தீபாவளி வீடியோக்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவை `எங்கள் ராஜாக்கூர் மண்ணின் மகிழ்ச்சியில், குடும்பத்தோடு தீபாவளி' எனக் குறிப்பிட்டு தன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியது. இந்த பதிவிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
அதில், ஒருவர் திண்ணையில் கிடந்தவனுக்கு திடுக்குன்னு வந்துச்சாம் வாழ்க்கை என பதவிட்டிருந்தார். இந்த பதிவிற்கு சூரி பதில் அளித்திருப்பது அனைவரது கனவத்தையும் பெற்றுள்ளது. சூரி அளித்த பதிலில், திண்ணையில் இல்லை நண்பா... பல நாட்கள் இரவும் பகலும் ரோட்டில் இருந்தவன் நான்… அந்த பாதைகள் தான் எனக்கு வாழ்க்கையின் உண்மையும் மதிப்பையும் கற்றுத் தந்தது. நீயும் உன் வளர்ச்சியில் நம்பிக்கை வைத்து முன்னேறினா, வெற்றி நிச்சயம் உன்னைத் தேடி வரும் என பதிலளித்துள்ளார்.