விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு என்னாச்சு?...லேட்டஸ்ட் அப்டேட் இதோ

Su.tha Arivalagan
Apr 21, 2026,11:10 AM IST

சென்னை: தமிழக அரசியல் மற்றும் திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து வழக்கு என்ன நிலையில் உள்ளது என விஜய் ரசிகர்கள் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.


பின்னணி என்ன?


கடந்த 27 ஆண்டுகளாகத் தங்களது திருமண வாழ்க்கையில் இணைந்திருந்த விஜய் - சங்கீதா தம்பதியினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக நீண்ட நாட்களாகவே கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் சங்கீதா முறைப்படி விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில் விஜய்யின் மீதான பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்துள்ளார்.


சங்கீதாவின் குற்றச்சாட்டுகள் :




சங்கீதா தாக்கல் செய்த 12 பக்க மனுவில், 2021-ம் ஆண்டு முதல் நடிகர் விஜய் ஒரு பிரபல நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தான் கண்டித்த பிறகும், விஜய் அந்த உறவைத் தொடர்ந்ததாகவும், இதனால் தனக்குக் கடும் மன உளைச்சல் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பொது நிகழ்ச்சிகள் மற்றும் வெளிநாட்டுப் பயணங்களுக்குத் தன்னை அழைத்துச் செல்லாமல், அந்த நடிகையுடன் விஜய் சென்றதாகச் சங்கீதா குற்றம் சாட்டியுள்ளார்.


தனக்கு வழங்கப்பட்டு வந்த நிதி சுதந்திரத்தை விஜய் குறைத்ததாகவும், தனது நடமாட்டத்திற்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் பரவிய வதந்திகளால் தானும், தனது பிள்ளைகளான ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷாவும் பெரும் அவமானத்தைச் சந்தித்ததாக அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.


நீதிமன்ற விசாரணை மற்றும் ஒத்திவைப்பு :


இந்த வழக்கு நேற்று (ஏப்ரல் 20, 2026) நீதிபதி சசிகலா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய் மற்றும் சங்கீதா ஆகிய இருவரையும் நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும், பல்வேறு காரணங்களால் இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் ஜூன் 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார். விஜய் தரப்பில் இந்த விவாகரத்து தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வமான எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. ஜூன் 15 அன்று நடைபெறவுள்ள விசாரணையில் விஜய் நேரில் ஆஜராவாரா என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.