நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் மனு மீது நாளை தீர்ப்பு
Jul 07, 2025,03:57 PM IST
சென்னை : போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோரின் ஜாமீன் மனு மீதான வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக கோர்ட் தெரிவித்துள்ளது.
போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் ஜூன் 23ம் தேதியன்று கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து நடிகர் கிருஷ்ணா ஜூன் 26ம் தேதி கைது செய்யப்பட்டார். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இவர்களுக்கு போதைப் பொருள் சப்ளை செய்ததாக நான்கு பேர் வரை கைது செய்யப்பட்டு, அவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் சிறையில் இருக்கும் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா தரப்பில் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் போலீசார் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவின் ஜாமின் மனுக்களை போதைப் பொருள் கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட் கடந்த வாரம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் அவர் தரப்பில் மீண்டும் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த கோர்ட், இவர்கள் இருவரின் ஜாமின் மனுக்கள் மீது நாளை (ஜூலை 08) தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
இதனால் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவிற்கு ஜாமின் கிடைக்குமா? அல்லது மீண்டும் அவர்களின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, காவல் நீட்டிக்கப்படுமா என அனைவரும் ஆவலாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வழக்கமாக போதைப் பொருள் வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களுக்கு குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு பிறகே ஜாமின் வழங்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் என்ன காரணங்களை குறிப்பிட்டு ஜாமின் கோரி உள்ளார்கள் என்பது தெரியவில்லை. அவர்கள் ஜாமினுக்கான காரணங்கள் நியாயமானதாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட வாய்ப்புள்ளது.