Sarojadevi is no more: "கன்னடத்து பைங்கிளி" நடிகை சரோஜா தேவி காலமானார்!

Su.tha Arivalagan
Jul 14, 2025,06:53 PM IST

பெங்களூரு : கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி என திரையுலகினராலும், ரசிகர்களாலும் கொண்டாடப்பட்ட பழம்பெரும் நடிகை சரோஜா தேவி வயது முதிர்வு காரணமாக காலமானார். அவருக்கு வயது 87.


1955 முதல் தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்தவர் நடிகை சரோஜா தேவி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 200 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என தமிழில் அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். பத்மஸ்ரீ, பத்மபூஷண் உள்ளிட்ட பல உயரிய விருதுகளை இவர் பெற்றுள்ளார். 


பெங்களூருவில் பிறந்து வளர்ந்த சரோஜா தேவியின் உண்மையான பெயர் ராதா தேவி கவுடா. இவரது அப்பா காவல் துறையில் பணிபுரிந்தவர். 1955 ம் ஆண்டு மகாகவி காளிதாஸ் என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். சினிமாவிற்காக தனது பெயரை சரோஜா தேவி என மாற்றிக் கொண்டார். 




தமிழில் இவர் நடித்த நாடோடி மன்னன், கல்யாண பரிசு போன்ற படங்கள் இவருக்கு பெரும் பெயரை தேடி தந்தன.  எம்ஜிஆருடன் அதிக படங்களில் நடித்துள்ளார். அத்தனைப் படங்களுமே சூப்பர் ஹிட்தான்.  1958ம் ஆண்டு தமிழில் எம்ஜிஆர் நடித்த நாடோடி மன்னன் படம் மூலம் அறிமுகமானார். 2010ம் ஆண்டு சூர்யா, நயன்தாரா நடித்த ஆதவன் படம் தான் சரோஜா தேவி கடைசியாக நடித்த படம்.


வயது முதிர்வின் காரணமாக பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் வாழ்ந்து வந்த சரோஜா இன்று காலை காலமானார். அவருக்கு திரையுலகினர் பலரும் நேரிலும், சோஷியல் மீடியா வழியாகவும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.