சாதி அடையாளங்களை தடை செய்யும் அரசாணையை முதல்வரே மீறக் கூடாது.. ஆ.த.மு.க.
சென்னை: சாதி அடையாளங்களை தடை செய்யும் அரசாணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அக்டோபர் 6ம் தேதிதான் வெளியிட்டார். இப்போது அந்த அரசாணையை மீறும் வகையில் கோவை மேம்பாலத்திற்கு ஜி.டி. நாயுடு என்ற பெயரை முதல்வர் சூட்டுவது முரண்பாடானது என்று ஆதி தமிழர் முன்னேற்றக் கழகம் கருத்து தெரிவித்துள்ளது.
கோவையில் அமைக்கப்பட்டுள்ள 10 கிலோமீட்டர் நீளம் கொண்ட பிரமாண்ட பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஆனால் இந்த அறிவிப்பு வெளியான பிறகு, தமிழ்நாட்டில் தெருக்கள், சாலைகள், மேம்பாலங்கள், பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் ஜாதிப் பெயர்கள் இருக்கக் கூடாது என்று அரசாணையை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது. இது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து ஆதி தமிழர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஆ.நாகராஜன் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் எடிசன் ஜிடி.நாயுடு என்று எல்லோராலும் கொண்டாடப்பட்ட, தந்தை பெரியாரின் உற்ற தோழன், பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களுக்கு உரிய மதிப்பு கொடுத்த ஜி.துரைசாமி அவர்களின் பெயரில், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மிக நீளமான கோவை அவிநாசி உயர் மட்ட காலத்திற்கு தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஜி.டி.நாயுடு என பெயர் சூட்டி இருப்பதை ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம் வரவேற்கிறது.
அதே நிலையில் தமிழ்நாட்டில் உள்ள தெருக்கள், சாலை, பாலங்கள் போன்றவற்றிற்கு பின்னால் உள்ள சாதி அடையாளங்களை நீக்கி கடந்த 06-10-2025 ல் அரசாணை (நிலை எண் 313) வெளியிட்டார் ஸ்டாலின் அவர்கள். ஆனால் இன்று அவரே அந்த அரசாணையை மதிக்காமல்.. சாதியின் பெயரில், அவிநாசி பாலத்திற்கு பெயர் சூட்டி உள்ளார், என்பது வேடிக்கையாக உள்ளது. இது கண்டனத்துக்குரியது.
இதனால் மதிப்பிற்குரிய ஜி.துரைச்சாமி அவர்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகளை தடுத்திட.. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஜிடி.நாயுடு என்ற பெயருக்கு பதிலாக ஜி.துரைசாமி என்று பெயர் சூட்ட வேண்டும் என ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம் வலியுறுத்துகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.