கூட்டணி குறித்து யாரும் பேச வேண்டாம்... கூட்டணி தானாக அமையும்... கவலை வேண்டாம் எடப்பாடி பழனிச்சாமி

Meenakshi
Nov 05, 2025,05:16 PM IST

சென்னை: கூட்டணி தொடர்பாக பொதுவெளியில் அதிமுகவினர் எந்த கருத்தையும் தெரிவிக்க வேண்டாம். கூட்டணி குறித்து கவலைப்பட வேண்டாம். அது தானாக நடக்கும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.


அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டம் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதிமுகவில் இருந்த மூத்த தலைவர் செங்கோட்டையன் நீக்கப்பட்டதற்கு பிறகு நடக்கும் முதல் கூட்டம் இது. சட்டசபை தேர்தலுக்கு 6 மாதங்கள் மட்டும் இருக்கும் நிலை, இந்த கூட்டம் நடைபெறுகிறது.




இந்த கூட்டத்தில்  எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், கூட்டணி தொடர்பான பிரச்சனைகளை நான் பார்த்துக் கொள்கிறேன். அதனைப்பற்றி யாரும் கவலைப்படத் தேவையில்லை. அது தானாகவே நடக்கும். அதேபோல் கூட்டணி பற்றி எந்தவொரு கருத்தையும் யாரும் பொதுவெளியில் பேச வேண்டாம். பூத் கமிட்டி பணிகளை சரியாகப் பார்த்தலே போதுமானது. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை கவனமுடன் கையாள வேண்டும்.


இது மிகவும் முக்கியமான பணி, வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை சரிசெய்வதற்கு இது சரியான தருணம் என்பதால் இதில் தனி கவனம் செலுத்தி, சரியான வாக்காளர் பட்டியல் தயார் செய்வதற்கு தேவையான உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு, அதன் விபரங்களை தலைமை கழகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.