திமுக - அதிமுக ஜல்லிக்கட்டு.. எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட 2 முக்கிய அறிவிப்புகள்!

Su.tha Arivalagan
Jan 27, 2026,05:47 PM IST

நாமக்கல்: ஜல்லிக்கட்டு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த பொங்கல் பண்டிகை சமயத்தில் 2 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் இன்று இரண்டு முக்கிய அறிவிப்புகளை ஜல்லிக்கட்டுக் களத்தில் இன்று வெளியிட்டார்.


ஜனவரி 17ம் தேதி  அலங்காநல்லூரில் உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்போது 2 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதாவது ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கும் வீரர்களுக்கு தகுதி அடிப்படையில், கால்நடை வளர்ச்சித்துறையில் அரசுப் பணி வழங்கப்படும் மற்றும் அலங்காநல்லூரில் ரூ. 2 கோடி செலவில் ஜல்லிக்கட்டு உயர் மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்று அவர் அறிவித்தார்.




முதல்வரின் அரசு வேலை என்ற அறிவிப்பு ஜல்லிக்கட்டு வீரர்களிடையே பெரும் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. 


இந்த நிலையில் தற்போது அதற்கு கவுன்டர் கொடுத்துள்ளார் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி. நாமக்கல் மாவட்டம் சாலப்பாளையம் கிராமத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. அதை எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.


அப்போது அவர் பேசுகையில், ஜல்லிக்கட்டுப் போட்டிகளின்போது தற்செயலாக மாடு முட்டி யாரேனும் உயிரிழக்க நேர்ந்தால் அவர்களது குடும்பத்துக்கு அதிமுக ஆட்சிக்கு வந்ததும் ரூ. 10 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும்.


அதேபோல  ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் பதிவு செய்யப்பட்ட வீரர்களுக்கும், காளைகளுக்கும் அரசே இன்சூரன்ஸ் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார்.


ஜல்லிக்கட்டை மையமாக வைத்து முதல்வரும், முன்னாள் முதல்வரும் அடுத்தடுத்து வெளியிட்டுள்ள இந்த அறிவிப்புகள் ஜல்லிக்கட்டு வீரர்கள் மத்தியில் குஷியை ஏற்படுத்தியுள்ளன.