CV Shanmugam: தவெக-வில் இணைகிறாரா சி.வி.சண்முகம்? ஆலோசனையில் பங்கேற்ற அந்த விஐபி!
திண்டிவனம்: தமிழக அரசியல் களத்தில் அடுத்தடுத்து பல அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வரும் நிலையில், தற்போது அதிமுகவின் முக்கியத் தூண்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்' (தவெக) கட்சியில் இணையப் போவதாக வெளியாகி உள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
விழுப்புரம் மாவட்ட அதிமுகவின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கும் சி.வி.சண்முகம், கடந்த சில நாட்களாக கட்சித் தலைமையுடன் சில அதிருப்தியில் இருந்து வருகிறார். இந்த நிலையில், திண்டிவனத்தில் உள்ள அவரது இல்லத்தில் தனது முக்கிய ஆதரவாளர்களுடன் அவர் அவசர மற்றும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
"அதிமுகவிலேயே தொடர்ந்து நீடிப்பதா? அல்லது தற்போதைய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைவதா?" என்பது குறித்து இந்த கூட்டத்தில் மிக முக்கியமாக விவாதிக்கப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சி.வி.சண்முகத்தின் திண்டிவனம் வீட்டிற்கு ஆலோசனையில் பங்கேற்க வந்த சில முக்கிய நிர்வாகிகளின் காரில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடி கட்டப்பட்டிருந்தது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தவெக கொடி கட்டிய காரில் வந்த நிர்வாகிகள் சி.வி.சண்முகத்தின் இல்லத்திற்குள் சென்று இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களும், தகவல்களும் தற்போது ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன.
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அதிமுக தலைமைக்கு எதிராக தனி அணியை உருவாக்கி, போர்க்கொடி உயர்த்தி வந்தார் சி.வி.சண்முகம். ஆனால் அதிமுக தலைமை எடுத்த அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகளால் பெரும்பாலானவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்து, மீண்டும் அதிமுக.,வில் சென்று இணைந்து கொண்டனர்.
சி.விஜய்பாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களின் எம்எல்ஏ., பதவிகளை ராஜினாமா செய்து விட்டு, தவெக.,வில் சென்று இணைந்து கொண்டனர். தன்னந்தனியாக இருக்கும் சி.வி.சண்முகம் அதிமுக.,விற்கு திரும்பனுவும் இல்லை. தனது எம்எல்ஏ., பதவியையும் ராஜினாமா செய்யாமல் தொடர்ந்து அதிமுக எம்எல்ஏ.,வாகவே நீடித்து வருகிறார்.
தவெக நிர்வாகி ஒருவர் வந்து ஆலோசனையில் கலந்து கொண்டு சென்றுள்ளதால் இவருக்கும் தவெக.,வில் இருந்து அழைப்பு வந்துள்ளது உறுதியாகிறது. ஆனால் சி.வி.சண்முகம் என்ன முடிவு எடுக்க போகிறார் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
ஒருவேளை தவெக.,வின் அழைப்பை ஏற்று அந்த கட்சியில் சென்று இணைய முடிவு செய்தால், அவரும் தனது எம்எல்ஏ., பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.இதனால் அதிமுக எம்எல்ஏ.,க்களின் எண்ணிக்கை இன்னும் குறையும். சி.வி.சண்முகம் ஏற்கனவே தேர்தலில் எம்எல்ஏ.,வாக வெற்றி பெற்றதால், தனது ராஜ்யசபா எம்.பி., பதவியை ராஜினாமா செய்து விட்டார். இப்போது எம்எல்ஏ., பதவியையும் அவர் ராஜினாமா செய்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.