புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையனுடன் அதிமுக அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் திடீர் சந்திப்பு

Su.tha Arivalagan
Aug 06, 2026,01:17 PM IST

சென்னை:தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், த.வெ.க பொதுச்செயலாளரும் அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையவ் ஆகியோரை அதிமுகவின் மூத்த தலைவர்களான முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் மற்றும் கே.பி.அன்பழகன் ஆகியோர் சந்தித்து பேசி உள்ள விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.


அரசியல் வட்டாரத்தில் கிளம்பிய புயல்

தலைமைச் செயலக வளாகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது. அதிமுக.,வில் ஏற்கனவே பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது முக்கிய நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். ஏற்கனவே முன்னாள் அமைச்சர்கள் பலர் தவெக.,வில் சென்று இணைந்து விட்டனர். இந்நிலையில் தற்போது அதிமுக.,வில் தொடரும் முக்கிய தலைவர்களும் தவெக பொதுச் செயலாளரை சந்தித்துள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது. குறிப்பாக, கொங்கு மண்டலம் மற்றும் வட தமிழகத்தில் வலுவான செல்வாக்கு கொண்ட அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஒரே நேரத்தில் இந்தச் சந்திப்பில் ஈடுபட்டுள்ளது அரசியல் கணக்குகளை மாற்றியமைக்கும் காரணியாகப் பார்க்கப்படுகிறது.


எஸ்.பி.வேலுமணி அளித்த அதிரடி விளக்கம் :




இந்தச் சந்திப்பு குறித்த செய்திகள் காட்டுத்தீ போல பரவியதைத் தொடர்ந்து, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று செய்தியாளர்களைச் சந்தித்து இதன் பின்னணி குறித்து விளக்கமளித்தார்.


செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது, திமுக.,வை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே தவெக அரசிற்கு ஆதரவாக நம்பிக்கை ஓட்டெப்பின் போது வாக்களித்தோம். தற்போது அமைந்துள்ளது புதிய அரசு. கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் வளர்ச்சி திட்டங்கள் எவ கொங்கு மண்டலத்தில் எதுவும் செய்யவில்லை. அதனால் எங்கள் துறை சார்ந்த கோரிக்கைகளை முன் வைக்கவே  சந்தித்தோம். மக்கள் நலப் பணிகளுக்காகவும், தொகுதி சார்ந்த பல்வேறு அரசு திட்டங்கள் குறித்துப் பேசுவதற்காகவுமே அரசுத்துறை சார்ந்த அதிகாரிகளையும் பொறுப்பாளர்களையும் சந்திப்பது வழக்கம். அதிமுக எங்கள் கட்சி. எங்களை வளர்த்த கட்சி. ஏன் நாங்கள் எங்கள் கட்சியில் இருப்பது பிடிக்கவில்லையா? என்றார். 


அதிமுகவின் முக்கிய தூண்களாக விளங்கும் வேலுமணி, சி.வி.சண்முகம் மற்றும் கே.பி.அன்பழகன் ஆகியோரின் அடுத்தடுத்த நகர்வுகள் குறித்து அரசியல் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் கூர்ந்து கவனித்து வருகின்றனர். இவர்களும் தவெக.,வில் இணைய திட்டமிட்டுள்ளார்களா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.