ADMK: அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை
சென்னை: அதிமுகவில் இருந்து மாவட்ட நிர்வாகிகள் மற்றும் முக்கியப் பொறுப்பாளர்கள் அடுத்தடுத்து விலகி வரும் சூழலில், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இன்று அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (04.07.2026) இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், ஒன்றிய, நகரப் பொறுப்பாளர்கள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.
கட்சியின் தற்போதைய கள நிலவரம், உட்கட்சிப் பூசல்கள் மற்றும் எதிர்வரும் அரசியல் சவால்களை எதிர்கொள்வது குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. குறிப்பாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்தும், தொண்டர்களைத் தக்கவைப்பது குறித்தும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளுக்குப் பல்வேறு ஆலோசனைகளையும், உத்தரவுகளையும் வழங்கியுள்ளார்.
கடந்த சில நாட்களாக அதிமுகவில் இருந்து மாவட்ட அளவிலான நிர்வாகிகள் மற்றும் முக்கியப் பொறுப்பாளர்கள் தொடர்ந்து விலகி மாற்று கட்சியில் இணைந்தோ அல்லது சுயேச்சையாகவோ செயல்படத் தொடங்கியுள்ளனர். இந்தத் தொடர் விலகல் அக்கட்சியின் தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் இந்த இக்கட்டான சூழ்நிலையைச் சமாளிக்கும் பொருட்டு, எடப்பாடி பழனிசாமி நேரடியாகக் களமிறங்கியுள்ளார்.
நேற்று (ஜூலை 3) செங்கல்பட்டு மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களின் முக்கிய நிர்வாகிகளுடன் அவர் தீவிர ஆலோசனை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் தொடர்ச்சியாகவே, இன்று திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகளுடனும் இந்த அவசரக் கூட்டம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
நிர்வாகிகளின் விலகலால் தொண்டர்கள் மத்தியில் சோர்வு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் அதிமுக தலைமை உறுதியாக உள்ளது. இதனால் மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நேரில் அழைத்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து தீர்வு காண எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
உட்கட்சிப் பிரச்சினைகளைத் தாண்டி, மக்கள்ப் பிரச்சினைகளை முன்னிறுத்திப் போராட்டங்களை நடத்தவும், களப்பணிகளை முடுக்கிவிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிமுகவில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் இந்த ஆலோசனைக் கூட்டங்கள், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளன.