4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்...அதிமுக மனு விசாரணைக்கு ஏற்பு

Su.tha Arivalagan
Jun 15, 2026,04:35 PM IST

சென்னை: தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாக "குதிரை பேர" புகார்களும், கட்சித் தாவல் விவகாரங்களும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த 4 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் (எம்.எல்.ஏ.க்கள்) ராஜினாமா மற்றும் தகுதி நீக்கம் தொடர்பான விவகாரம் இப்போது சட்டப் போராட்டமாக மாறியுள்ளது.


அதிமுக குற்றச்சாட்டு

அதிமுகவில் இருந்து விலகிய அந்த 4 எம்.எல்.ஏ.க்களும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டியவர்கள் என்று அதிமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், அதற்கு முன்னதாகவே அவர்கள் அளித்த ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக் கொண்டார். சபாநாயகரின் இந்த அதிரடி முடிவை எதிர்த்து அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், "தகுதி நீக்க நடவடிக்கைக்கு ஆளாக வேண்டிய 4 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் அவசர அவசரமாக ஏற்றுக் கொண்டது முற்றிலும் சட்டவிரோதமானது. சபாநாயகரின் இந்த முடிவு, இந்திய அரசியலமைப்பின் மிக முக்கிய சட்டமான கட்சித் தாவல் தடைச் சட்டத்தையே நீர்த்துப் போகச் செய்யும் செயலாக அமைந்துள்ளது" என்று அதிமுக தரப்பில் மிகக் கடுமையான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.


இடைத்தேர்தலுக்கு தடை கோரி மனு :




அதோடு அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சார்பில், காலியாக உள்ள 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தடை கேட்டும் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ராஜினாமா செய்த முன்னாள் அதிமுக எம்எல்ஏ.,க்கள் 4 பேர் மீதான தகுதிநீக்க விவகாரத்தில் முடிவு எட்டப்படும் வரையில் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிட தேர்தல் கமிஷனுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதாக சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.


தமிழக அரசு அதிரடித் தகவல்!

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கின் விசாரணையின் போது, தமிழக அரசுத் தரப்பில் முக்கிய விளக்கம் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. தவெகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் குறித்து, "சபாநாயகர் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுப்பார்" என்று தமிழக அரசு நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாகத் தகவல் தெரிவித்துள்ளது.  சபாநாயகர் நடுநிலையோடும், சட்ட விதிகளுக்கு உட்பட்டும் தனது கடமையை ஆற்றுவார் என்பதை அரசுத் தரப்பு இதன் மூலம் தெளிவுபடுத்தியுள்ளது.


நீதிமன்றத்தில் அடுத்தடுத்து விசாரணை :

தமிழக அரசியலில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தக் கூடும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த "குதிரை பேர வழக்கு" மற்றும் ராஜினாமா உத்தரவுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை, சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை மற்றும் மறுநாள் (அடுத்தடுத்த நாட்களில்) விரிவாக விசாரணைக்கு வரவுள்ளது.  நீதிமன்றம் இந்த விவகாரத்தில் என்ன மாதிரியான உத்தரவைப் பிறப்பிக்கப் போகிறது, சபாநாயகரின் முடிவில் நீதிமன்றம் தலையிடுமா அல்லது சபாநாயகரின் சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு அவகாசம் அளிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த வழக்கின் தீர்ப்பு, தமிழக அரசியல் களத்தில் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் எதிர்கால வீரியத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.