கீழடி அகழாய்வை நிராகரித்தால் .... முதல் குரலாக அதிமுகவின் குரல் ஒலிக்கும்: ஆர்.பி.உதயகுமார்

Meenakshi
Jun 18, 2025,02:56 PM IST

சென்னை: கீழடி அகழாய்வு நிராகரிக்கப்பட்டால், அதனை உண்மையாக எதிர்க்கும் முதல் குரல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் குரலாகத் தான் இருக்கும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.


இது குறித்து  அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்ட அறிக்கையில், கீழடியில் அகழாய்வுப் பணியை முதன்முதலில் அறிமுகப்படுத்தியதே அண்ணன் எடப்பாடியார் அவர்களுடைய ஆட்சியில்தான். உண்மையை மறைத்து வாழ்கிழிய கத்தும் திமுகவிற்கு கண்டனம். திமுக எப்படிப்பட்ட கேவலமான, அப்பட்டமான ஜாதி வெறி பிடித்த கட்சி என்பதை, தன்னைத் தானே அம்பலப்படுத்திக்கொண்டு நிற்கிறது. அதிமுக என்ற கட்சி தொடங்கப்பட்டதன் காரணமே ஜாதி பேதத்தை அகற்றுவதற்காகத்தான்.


அண்ணன் எடப்பாடியார் அவர்கள் எளிய மனிதர், ஒரு விவசாயி, தன் உழைப்பால் உயர்ந்து முதலமைச்சராகி, இன்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக, ஆளும் ஸ்டாலின் அரசின் தவறுகளை சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கிறார். அதற்கு பதில் சொல்ல முடியாமல் மிகக் கேவலமான, அவதூறான ஜாதிய வன்மத்தில், தனிமனித விமர்சனத்தில் இறங்கியுள்ளது திமுக.




விவசாயிகளின் உழைப்பை, கஷ்டங்களை அறிந்தவர். வயல்வெளியில் வியர்வை சிந்தி விவசாயம் செய்தவர் தான் எங்கள் கழகப் பொதுச் செயலாளர் `புரட்சித் தமிழர்' அண்ணன் எடப்பாடியார் அவர்கள். அதில் எங்களுக்கு பெருமையும், கர்வமும் எப்போதும் உண்டு.


போட்ட சட்டையையே கிழித்துக்கொண்டு `ஐயோ, அம்மா' என்று உங்கள் தலைவர் ஸ்டாலின் கதறிய காட்சிகளை கார்ட்டூனில் எல்லாம் வரைய வேண்டிய அவசியம் இல்லை.ஏனென்றால் அதெல்லாம் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பில் பார்த்து தமிழ் நாட்டு மக்கள் கைகொட்டி சிரித்ததை யாரும் மறக்கவில்லை.கீழடி அகழாய்வை அறிமுகப்படுத்தியதே, எங்கள் அண்ணன் எடப்பாடியார் ஆட்சியில்தான். வாழ் கிழிய உண்மையை மறைத்து கத்துவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.


சிவகங்கை மாவட்டம், கீழடி அகழாய்வுப் பணிக்கு ரூ. 55 லட்சம் ஒதுக்கி 18.4.2018 அன்று அகழாய்வுப் பணிகள் துவங்கப்பட்டு செப்டம்பர் 2018-ல் பணிகள் முடிக்கப்பட்டன. அதில், 34 அகழாய்வுக் குழிகள் அமைக்கப்பட்டு, 5820 அரிய வகை தொல் பொருட்கள் கண்டறியப்பட்டன. தொடர்ந்து உலகத் தரம் வாய்ந்த தள அருங்காட்சியகம் அமைப்பதற்கு ரூ. 12.21 கோடி ஒதுக்கப்பட்டது. ஏதேனும் சந்தேகம் இருந்தால் இத்திட்டங்களை முன்னிருந்துசெயல்படுத்திய அதிகாரி, இப்போதைய நிதித் துறை முதன்மைச் செயலாளர் உதயசந்திரன் அவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.


மத்திய அரசு (கூடுதலாக உறுதிப்படுத்தல்) Additional Corroboration-க்காக சில தரவுகளைக் கேட்டுள்ளது. அதை கீழடி ஆய்வாளர்கள் கொடுக்கத்தான் போகிறார்கள்.அது ஒப்புதல் ஆகத்தான் போகிறது. கீழடி அகழாய்வு நிராகரிக்கப்பட்டால், அதனை உண்மையாக எதிர்க்கும் முதல் குரல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் குரலாகத் தான் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.