திமுகவிடம் தாலி கட்டிய மனைவி போல் தான் உள்ளனர் கூட்டணி கட்சிகள்: செல்லூர் ராஜூ விமர்சனம்!

Meenakshi
Feb 12, 2026,06:31 PM IST

மதுரை:  கூட்டணி என்பது தேர்தல் நேரத்திற்கு மட்டும் தான். தற்பொழுது திமுகவிடம் தாலி கட்டிய மனைவி போல் தான் கூட்டணி கட்சிகள் உள்ளனர் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.


இது குறித்து மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில்,  மத்திய அரசு உணவுப் பொருட்களுக்கு ஒரிரு சதவீதம் ஜி.எஸ்.டி வரி போடுகிறது. இதனை தமிழகத்தின் விலைவாசி உயர்வுடன் ஒப்பிட வேண்டாம். அன்று 40 ரூபாய்க்கு வாங்கிய அரிசி இன்று 70, 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனால் ஜிஎஸ்டி  ஒரு சதவீதம் அல்லது 2 சதவீதம் தான் போடுகிறார்கள். அதனால், மத்திய அரசு மத்திய அரசு என்று  எல்லாவற்றிற்கும்  சொல்ல வேண்டாம். 


எல்லா ஆட்சியிலும் காலத்திற்கு ஏற்ப விலை வாசி உயர்வு இருக்கத்தான் செய்யும். அதை கட்டுப்படுத்த திமுகவினர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதை அவர்கள் செய்யவில்லை. அதிமுக ஆட்சியில் வெங்காயம் உள்ளிட்ட உணவு பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு விலைவாசி உயர்வு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.  திமுக கூட்டணியில் உள்ள  கட்சிகள் பவ்யமாக இருக்கின்றன. கம்யூனிஸ்ட்கள் ஏழை, எளிய மக்களுக்காக குரல் கொடுக்காமல் சீட் வாங்கிவிடத்தான் நினைக்கிறார்கள். 




2026 ல் திமுக எதிர்க்கட்சியாக கூட அமர முடியாது. 2011ல் நடந்தது போலத்தான் இப்போதும் நடக்கப்போகிறது. ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை இல்லை என்பதை முதலமைச்சர் யாரிடம் கேட்டார்? சாதாரண மக்களை சந்தித்து பேசினால் மட்டுமே மக்கள் பிரச்சனை வெளியில் வரும். சாதனைகளை சொல்லிச் சொல்லி ஓட்டு கேட்டாளும் ரியல் ஹீரோ எடப்பாடி பழனிசாமி தான்  மீண்டும் முதலமைச்சர் ஆவார்.


திமுக கூட்டணி கட்சிகள் திமுகவிடம் தாலி கட்டிய மனைவி போல் உள்ளனர். கூட்டணி என்பது தேர்தல் நேரத்திற்குத் தான். வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்காகத்தான். ஆனால், திமுக ஆட்சியில் நிலவும் பிரச்சனைகளை கண்டு கொள்ளாமல் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளன. இந்தியாவிலேயே தலித்கள், பெண்கள் அதிகமாக பாதிக்கப்படும் தமிழ்நாடு என்ற புள்ளி விவரம் வருகிறது. இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.