அதிமுக -பாஜக கூட்டணி மட்டுமே, கூட்டணி ஆட்சி கிடையாது: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி!

Meenakshi
Apr 16, 2025,06:49 PM IST

சென்னை: அதிமுக -பாஜக கூட்டணி மட்டுமே, கூட்டணி ஆட்சி கிடையாது. டெல்லிக்கு பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு எடப்பாடி பழனிச்சாமி என்று தான் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.


இன்று தமிழக சட்டசபை கூடியதும், அதிமுக தரப்பில் திமுக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி, கே.என்.நேரு ஆகியோர்கள் மீது கொடுக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து விவாதிக்க வலியுறுத்தினர். இதற்கு சபாநாயகர் அனுமதி மறுக்க எடப்பாடி தலைமையில், அதிமுக எம்எல்ஏக்கள் கோஷம் எழுப்பி, அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.




அதன்பின்னர் செய்தியாளர்களிடம்  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், மக்களிடத்தில் ஒரு பதற்றமான சூழ்நிலை நிலவிக்கொண்டிருக்கிறது. அமலாக்கத்துறை பல்வேறு துறைகளிலே சோதனை நடத்தி வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இயங்கும் அமைச்சரவை மீதான நம்பிக்கை போய்விட்டது. விதிகளை மீறி செயல்படும் 3 அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரி விதி 72ன் கீழ் சபாநாயகரிடம் கடிதம் அளித்தோம். ஆனால், அதுகுறித்து விவாதிக்க சபாநாயகர் அப்பாவு அனுமதி மறுத்த வருகிறார். இதனால், சபாநாயகரை கண்டித்து, சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளோம். பேரவையில் கடந்த காலங்களில் அமைச்சரவை மீது நம்பிக்கையில்லா தீர்மானம் பலமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. பிரதான எதிர்கட்சி என்ற வகையில், மக்கள் பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு விவாதித்து வருகிறோம். 


அதிமுக ஆட்சியில் பலமுறை  திமுக பேச  அனுமதி அளித்தோம். ஆனால் இன்று எங்களுக்கு பேச வாய்ப்பு மறுக்கப்படுகிறது. முக்கிய பிரச்சனையை பேச அனுமதி மறுக்கப்படுகிறது.  பொன்முடி அவர்கள் பெண்களை இழிவு படுத்தி பேசலாமா?. உயர்ந்த பதவியில் இருப்பவர் இப்படி பேசலாமா? அனைத்து மதத்தையும் சமமாக கருதும் கட்சி அதிமுக. அதிமுக -பாஜக கூட்டணி மட்டுமே, கூட்டணி ஆட்சி கிடையாது. டெல்லிக்கு பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு எடப்பாடி பழனிச்சாமி என்று தான் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். நாங்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் திமுகவிற்கு பயம் வந்துவிட்டது. நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால் உங்களுக்கு என்ன? பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதால், அவர்களுக்கு எரிச்சல். எங்கள் கூட்டணி வலுவான கூட்டணியா? வலு இல்லாத கூட்டணியா என்பது தேர்தலின் போது தான் தெரியும் என்று தெரிவித்துள்ளார்.