இனி நமக்குள் பிரிவில்லை.. இது எஃகு கோட்டை.. யாராலும் தகர்க்க முடியாது: அதிமுக ஐடி விங்

Su.tha Arivalagan
May 27, 2026,10:53 AM IST

சென்னை: கோடான கோடி தொண்டர்களின் தியாகத்தால் வளர்ந்த இந்த எஃகு கோட்டையை இனி எவராலும் அசைக்க முடியாது. இனி நமக்குள் பிரிவில்லை... இந்த எஃகு கோட்டையை தகர்க்க இனி எவருக்கும் வழியில்லை.. என்று அதிமுக ஐடி விங் தெரிவித்துள்ளது.


அதிமுகவில் தேர்தலுக்குப் பின் ஏற்பட்ட பிளவு தற்போது சரியாகி விட்டதாக கூறப்படுகிறது. சிவி சண்முகம் - எஸ்பி வேலுமணி தலைமையிலான குழு இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்து ஒருங்கிணையப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக சட்டசபை உறுப்பினர்கள் இரு பிரிவுகளாகப் பிரிந்தனர். இதில் எஸ்பி. வேலுமணி - சிவி சண்முகம் தலைமையிலான குழுவிடம் 25 உறுப்பினர்கள் பிரிந்து வந்தனர். இதுதொடர்பாக இரு தரப்பும் சட்டசபை சபாநாயகரிடம் பல்வேறு மனுக்களையும் அளித்து வந்தன.




இந்த நிலையில் திடீர் திருப்பதாக தவெக அமைச்சரவையில் சிவி சண்முகம் தரப்புக்கு எந்த இடமும் அளிக்கப்படவில்லை. இதனால் அந்தக் குழு ஏமாற்றமடைந்தது. இதையடுத்து அங்கிருந்து எம்எல்ஏக்கள் அணி மாற ஆரம்பித்தனர். அடுத்தடுத்து பல எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்து அவருடன் இணைந்தனர். நான்கு எம்எல்ஏக்கள் பதவி விலகி தவெகவில் இணைந்து கொண்டனர்.


இப்படியே நிலைமை போனால் மோசமாகி விடும் என்ற நிலையில் தற்போது சிவி சண்முகம் குழு தரப்பிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பிடம் சமரசம் பேசினர். நேற்று மூத்த உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இன்று இரு தரப்பும் ஒன்றிணையவுள்ளதாக கூறப்படுகிறது.


இந்த பின்னணியில் அதிமுக ஐடி விங் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:


எனக்கு பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மக்களுக்காகவே இயங்கும் - அம்மா


கோடான கோடி தொண்டர்களின் தியாகத்தால் வளர்ந்த இந்த எஃகு கோட்டையை இனி எவராலும் அசைக்க முடியாது!


இனி நமக்குள் பிரிவில்லை... இந்த எஃகு கோட்டையை தகர்க்க இனி எவருக்கும் வழியில்லை..


நம் இலக்கு ஒன்றுதான்... அது கோட்டையில் மீண்டும் நமது இரட்டை இலை கொடி பறப்பது மட்டுமே!


நாளை நமதே! தமிழ்நாடும் நமதே என்று அதில் கூறப்பட்டுள்ளது. அதிமுகவில் நிலவி வந்த பூசல் முடிவுக்கு வருவது அக்கட்சி தொண்டர்களை நிம்மதிப் பெருமூச்சு விட வைத்துள்ளது.